மீண்டும் புத்துயிர் பெறும் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம்


மீண்டும் புத்துயிர் பெறும் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம்
x

1972-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக மறுவாழ்வு திட்டத்தை மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி கொண்டு வந்தார். இதன் மூலம் பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டு அவர்கள் தகுதிக்கு ஏற்ப சுயதொழில் வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கிக் கொடுத்தது.

புதுக்கோட்டை

ஓடி ஒளிந்தார்கள்

* ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் என்று மக்கள் கூடுகிற இடங்களில் பிச்சை எடுப்பவர்களை, வாகனங்களில் வந்து பிடித்துப் போவார்கள்.

அரசு வாகனங்கள் வருவதைக் கண்டாலே போதும் தங்களைப் பிடிக்க வருகிறார்கள் என்று பிச்சைக்காரர்கள் ஓடி ஒளிந்தார்கள்.

* அவ்வாறு பிடித்துப்போனவர்களில் நோயாளிகளாக இருந்தால் அரசு மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படும்.

* மன நோயாளிகளாக இருந்தால் மனநல காப்பகத்தில் சேர்க்கப்படுவர்.

* மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அவர்களின் தகுதிக்கு ஏற்ப சுயதொழில்கள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும்.

* நிர்பந்தங்களால் பிச்சை எடுக்க வந்தவர்களாய் இருந்தால் உறவினர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.

* இதற்காக தமிழ்நாட்டில் 6 இடங்களில் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மையங்கள் கட்டித் தரப்பட்டன.

இது ஒரு உன்னதமான சமூகநலத் திட்டம். இதை ஒழுங்காக நடைமுறைப்படுத்தி இருந்தால் பிச்சைக்காரர்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி இருக்க முடியும்.

காசு பார்க்கும் கயவர்கள்

'பிச்சை எடுத்து உண்ணுவது அவமானம். உழைத்து உண்பதே தன்மானம்' என்பது அந்தத் திட்டத்தின் நோக்கமாக அமைந்தது.

நாளடைவில் அது முடங்கிப்போனதால் பஸ், ரெயில் நிலையங்கள், போக்குவரத்து சிக்னல்கள், வழிபாட்டு தலங்கள் போன்ற இடங்கள் மீண்டும் பிச்சைக்காரர்களின் புகலிடமாக மாறிப்போயின.

குழந்தைகளின் வயிற்றுப்பசியை போக்குவதற்காக ஆதரவற்ற முதியோர்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாகுகின்றனர்.

அதே நேரம், உழைக்காமல் கையை நீட்டினாலே பணம் கிடைப்பதால் பிச்சை எடுப்பதை தொழிலாக பலர் செய்யவும் துணிகிறார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால்? குழந்தைகள், பெண்களை கட்டாயப்படுத்தி இந்தத் தொழிலில் தள்ளி காசு பார்க்கும் கயவர் கூட்டமும் நிழல் மறைவாய் இருக்கத்தான் செய்கிறது. இயக்குனர் பாலாவின் 'நான் கடவுள்' திரைப்படம், இந்த அக்கிரமத்தை வெளிச்சம் போட்டு காட்டி இருந்தது.

பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுக்காக மத்திய அரசு ரூ.182 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது.

டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், ஐதராபாத், இந்தூர், லக்னோ, நாக்பூர், பாட்னா, அகமதாபாத் ஆகிய 10 நகரங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப் படுகிறது.

போலீஸ் நடவடிக்கை

தற்போது தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்களை கட்டுப்படுத்தவும், அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களை சேர்ந்த சிலரும் தமிழ்நாட்டில் பிச்சை எடுப்பதை தொழிலாக செய்து வருகிறார்கள். போக்குவரத்து அதிகமாக இருக்கும் 'சிக்னல்' பகுதிகளில் அவர்களைக் குழந்தை குட்டிகளுடன் காணமுடிகிறது.

இந்த நிலையில் 'ஆபரேஷன் மறுவாழ்வு' என்ற அதிரடி நடவடிக்கையை தமிழக போலீஸ்துறை கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் கடந்த 3-ந்தேதி முதல் மாநிலம் முழுவதும் பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

மீட்கப்படும் பிச்சைக்காரர்கள் அரசு காப்பகங்கள், மறுவாழ்வு மையங்கள், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள். பெண்கள், குழந்தைகளை பிச்சை தொழிலில் ஈடுபடுத்தும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கடும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.

இதில் கண்துடைப்பு இல்லாமல் உணர்வுப்பூர்வமான நடவடிக்கைகள் இருக்கும் என்றால் பிச்சை எடுப்பவர்கள் கட்டுப்படுத்தப்படுவதுடன் மறுவாழ்வும் பெறுவார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

பிச்சை எடுக்கும் தொழிலை ஒழிப்பதற்காக எடுத்துவரும் இந்த நடவடிக்கை பொதுமக்களிடம் ஏற்படுத்திவரும் தாக்கம் குறித்து கீழே காண்போம்.

மறுவாழ்வு கிடைத்தது

திருமயம் பஸ் நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் கிடந்த பார்வையற்ற மூதாட்டி லட்சுமி:- ''எனது மகன் உணவகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். இந்தநிலையில், எனக்கு கண் பார்வை மங்கியதால் நான் ஒதுக்கப்பட்டேன். பஸ் நிலையத்தில் படுத்த படுக்கையில் வீழ்ந்து விட்டேன். எனது மகன் உணவகத்தில் வேலை பார்த்தாலும் எனக்கு உணவு கொடுக்கவில்லை. பஸ் நிலையத்திலிருந்த என்னை பொதுமக்கள் சிலர் உணவு மற்றும் தேநீர் கொடுத்து வந்தார்கள். இந்தநிலையில் காப்பகத்தினர் என்னை மீட்டு தங்க வைத்தனர். நான் இங்கு வந்த பிறகு நல்ல உணவு உட்கொண்ட பின் ஆரோக்கியமானேன். எனது கண்களுக்கு ஆபரேஷன் மூலம் பார்வை கிடைத்தது. நன்கு நடக்க முடிகிறது. எனது அன்றாட வேலைகளை நானே பாா்த்துக்கொள்கிறேன். மீண்டும் எனக்கு மறுவாழ்வு கிடைத்தது போல உள்ளது''.

மனோ தத்துவ முறையில் சிகிச்சை

பொன்னமராவதியை சேர்ந்த சமூக ஆர்வலரான பாஸ்கர்:- 'ஆபரேஷன் மறுவாழ்வு' என்ற அதிரடி நடவடிக்கையை தமிழக போலீஸ்துறை கையில் எடுத்துள்ளது. இந்த திட்டத்தை மனதார வரவேற்கிறேன். மறுவாழ்வு திட்டம் மூலம் மீட்கப்படுபவர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு மனோ தத்துவ முறையில் சிகிச்சை அளித்து அதன் பின்பு சேவை மனப்பான்மை கொண்ட அதிகாரிகளை நியமித்து அவர்களை முகாமில் வைத்து கண்காணிக்க அரசு முயற்சி செய்ய வேண்டும். ஏனெனில் பிச்சைக்காரர்கள் சிலர் முரடு பிடித்தவர்கள். மனரீதியான பிரச்சினைகளுக்குட்பட்டவர்களாக தான் உள்ளார்கள். அவர்களை சரி செய்த பின்பு முகாமில் வைத்து பாதுகாக்க வேண்டும். அவ்வாறு அரசு செயல்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

மது குடிக்க...

மேற்பனைக்காடு பகுதியை சேர்ந்த முகமது மூசா:-

கையேந்தும் முதியோர்களை பார்த்தால் தர்மம் செய்ய மனம் தானாகவே இறங்கி வருகிறது. ஆனால் கை, கால்கள் நல்ல நிலையில் உள்ளவர்கள் மது குடிப்பதற்காக பிச்சை எடுத்து வருகிறார்கள். தற்போது பிச்சைக்காரர்களை மீட்டு மறுவாழ்வு மையத்தில் ஒப்படைக்கும் நடவடிக்கை பாராட்டுக்குரியது. ஆனால் ஓரிரு நாட்கள் மட்டும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுவிட்டு கைவிட்டுவிடக் கூடாது. தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மேலும், சாலையோரங்களில் சுற்றும் சிறுவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு போதிய சிகிச்சை அளித்து அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

தண்டனை வழங்க வேண்டும்

கல்குடியை சேர்ந்த வக்கீல் அய்யப்பன்:- குழந்தை தொழிலாளர்கள், குடும்பத்தினரால் கைவிடப்பட்ட முதியவர்கள், குடும்ப வறுமையின் காரணமாக பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுபவர்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் விதமாக இந்த திட்டத்தின் நோக்கம் உள்ளதால் இது பொதுமக்கள் மத்தியில் மிகவும் வரவேற்கத்தக்க திட்டமாக அமையும். தற்போது உள்ள காலக்கட்டத்தில் பிள்ளைகள் தங்களது பெற்றோரை தனிமையில் தவிக்க விடுகின்றனர். இதில் ஒரு சிலர் குடும்பத்தை விட்டு வெளியேறி பிச்சை எடுப்பதும், சிலர் தங்களது உயிரை மாய்த்துக் கொள்வது போன்ற தவறான முடிவை எடுத்து விடுகின்றனர். தற்போது இந்த திட்டத்தின் மூலமாக அவர்களுக்கு முதியோர் காப்பகங்கள் மூலமாக மறுவாழ்வு கிடைக்க வாய்ப்புள்ளது. குழந்தைகளை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், புறவழிச்சாலைகள் ஆகிய பகுதிகளில் பிச்சை எடுக்க பயன்படுத்தும் கும்பல்களை கண்டறிந்து அவர்களுக்கு மிகக்கடுமையான தண்டனையை பெற்றுத் தர வேண்டும்.

குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராகவி:- ''கோவில்கள், பொது இடங்களில் பிச்சை எடுப்பவர்களை மீட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க டி.ஜி.பி. உத்தரவின்படி இந்த சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் சிலருக்கு குடும்பம் இருந்த நிலையில் அவர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் ஒரு சிலர் காப்பகத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் இவர்களை வைத்து ஏதேனும் கும்பல் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்துகிறதா? என்பதை கண்காணிக்க தான் இந்த ஆய்வு நடைபெற்றது. இந்த கண்காணிப்பானது தொடர்ந்து மேற்கொள்ளப்படும். மேலும் மீட்கப்பட்டவர்களிடம் மீண்டும் இதுபோன்ற பிச்சை எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களது குடும்பத்தினருக்கும் அறிவுரை வழங்கப்பட்டது''.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆபரேஷன் மறுவாழ்வு நடவடிக்கை மூலம் மீட்கப்படும் வயதான பிச்சைக்காரர்களுக்கு மட்டும்தான் அடைக்கலம். உடல்நிலை நன்றாக உள்ள பிச்சைக்காரர்கள் மனதில் உழைத்து உண்ண வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தலாக உள்ளது.

வாரி வழங்கும் பிச்சைக்காரர்

பிச்சைக்காரர்கள் என்றால் ஏளனமாகப் பார்க்கும் சமுதாயத்தில் பாண்டி என்ற பிச்சைக்காரர் (வயது 72) தனது சமூக செயல்பட்டால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்.

இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா ஆலங்கிணறு ஆகும். வசதியான குடும்பத்தில் பிறந்த இவர் தனது மனைவி மறைவுக்கு பின்னர் மன நிம்மதிக்காக திருச்செந்தூர் கோவிலில் தங்கத்தொடங்கினார். நாளடைவில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

தனக்கு தானமாக கிடைக்கும் பணத்தில் அரசு பள்ளிக்கூடங்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து உதவுவதை வழக்கமாகக் கொண்டு இருக்கிறார்.

அவர், 'பிச்சை எடுக்கும் தொகையில் ஒரு பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் ஒதுக்குவேன்' என்று பெருமிதத்துடன் கூறி இருக்கிறார்.

இலங்கை அரசு பொருளாதார நெருக்கடியில் சிக்கியபோது தமிழக அரசு உதவிக்கரம் நீட்டியது. அப்போது மதுரை கலெக்டரிடம் பாண்டி ரூ.20 ஆயிரம் நன்கொடை அளித்து பாராட்டைப் பெற்றார். கடந்த 2010-ம் ஆண்டு முதல் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் பாண்டி தானமாக கிடைக்கும் பணத்தை சேமித்து வைத்து அரசு நலத்திட்டங்களுக்கு லட்சக்கணக்கில் நன்கொடை அளித்துள்ளார். கொரோனா காலக்கட்டத்தின்போது பிச்சைக்காரர்கள் பரிதவித்த போது முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு பாண்டி நன்கொடை அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளை பயன்படுத்தி பிச்சை;

தகவல் தெரிவித்தால் பணம் வெகுமதி

குழந்தைகளைக் கடத்தி அவர்களைப் பிச்சை தொழிலில் ஈடுபடுத்தும் கும்பல் குறித்து 044-28447701 என்ற தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம். தகவல் கொடுப்பவர்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். அவர்களுக்குத் தகுந்த பண வெகுமதி அளிக்கப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.


Next Story