உதவி திட்ட அலுவலர் பணியிடத்தை வட்டாரக்கல்வி அலுவலர்களின் பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க கோரிக்கை


உதவி திட்ட அலுவலர் பணியிடத்தை வட்டாரக்கல்வி அலுவலர்களின் பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க கோரிக்கை
x

உதவி திட்ட அலுவலர் பணியிடத்தை வட்டாரக்கல்வி அலுவலர்களின் பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி

தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் டி.வி.எஸ்.டோல்கேட் அருகே ஒரு பள்ளியில் நேற்று நடந்தது. மாநில தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் கமலநாதன் வரவு, செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். மாநில பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்து, சங்க தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தொடக்கக்கல்வித்துறை வரலாற்றில் முதன்முதலாக அனைத்து 414 வட்டாரக்கல்வி அலுவலகங்களில் உள்ள அனைத்து 851 வட்டாரக்கல்வி அலுவலர் பணியிடங்களையும், பதவி உயர்வு அல்லது நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்து காலிப்பணியிடம் ஏதும் இல்லை என்ற சாதனை நிகழ்த்தியுள்ள முதல்-அமைச்சருக்கும், பள்ளிக்கல்வி அமைச்சருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம். மாவட்ட கல்வி அலுவலகத்தில் புதிதாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் மாற்றுப்பணியில் ஏற்படுத்தப்பட்டுள்ள உதவித்திட்ட அலுவலர் பணியிடத்தை தொடக்கக்கல்வி சார்நிலை பணி விதிகளில் சேர்த்து வட்டாரக்கல்வி அலுவலர்களின் பதவி உயர்வு பணியிடமாக அறிவித்து அடுத்த பதவி உயர்வை வழங்க வேண்டும்.

இதன் மூலம் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை பற்றி எவ்வித முன் அனுபவமும் இல்லாதோர் பணியாற்றுவதால் ஏற்படும் நிர்வாக குறைபாடுகள் தவிர்க்கப்படும். ஒளிவுமறைவற்ற வகையில் காலிப்பணியிடங்களை இணையதளத்தில் வெளியிட்டு வட்டாரக்கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தியதற்கு நன்றி தெரிவிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story