திருட்டு சம்பவங்களை தடுக்க கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும்


திருட்டு சம்பவங்களை தடுக்க கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 24 May 2023 6:45 PM GMT (Updated: 24 May 2023 6:46 PM GMT)

திருட்டு சம்பவங்களை தடுக்க கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சமீப காலமாக தொடர்ந் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு சில திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டாலும், பல திருட்டு சம்பவங்களில் இன்றுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தாலும் மர்ம நபர்களை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், சிங்கம்புணரி பகுதி தொழில் நிறைந்த நகரமாகும். இப்பகுதியில் குடியிருப்புகள், தெருக்கள் அதிகமாக உள்ளன. இருப்பினும் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதை தடுக்கும் விதமாக குடியிருப்பு பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் அந்தந்த பகுதியில் குறிப்பிட்ட தூரத்திற்கு மொத்தமாக வசூல் செய்து பொது கண்காணிப்பு கேமராவை பொருத்த ஏற்பாடு செய்யலாம். இல்லாவிட்டால் முக்கியமான பகுதியில் உள்ள வசதி படைத்தவர்கள் வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தலாம். அவ்வாறு கண்காணிப்பு கேமரா வைத்தால் குற்ற சம்பவங்களை தடுக்க உதவும் என்றார். பேரூராட்சி சார்பில் விரைவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உள்ள நிலையில் சமூக சேவகர் மற்றும் அமைப்புகள் ஒன்றிணைந்து மேலும் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினால் குற்ற சம்பவங்களை தடுக்கவும், போலீசாருக்கு குற்ற சம்பவங்களில் ஈடுபடுவர்களை பிடிக்கவும் உதவியாக இருக்கும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story