உத்திரமேரூர் ஏரியில் ரூ.18 கோடியே 88 லட்சத்தில் புனரமைப்பு பணிகள்


உத்திரமேரூர் ஏரியில் ரூ.18 கோடியே 88 லட்சத்தில் புனரமைப்பு பணிகள்
x

உத்திரமேரூர் ஏரியில் ரூ.18 கோடியே 88 லட்சத்தில் புனரமைப்பு பணிகள் தொடங்கியது.

செங்கல்பட்டு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி, தென்னேரி ஏரி, உள்ளிட்டவைகளுக்கு அடுத்ததாக மாவட்டத்தின் பெரிய ஏரியாக உத்திரமேரூர் ஏரி விளங்குகிறது. உத்திரமேரூர்- மானாம்பதி சாலை குறுக்கே செல்வதால் பெரிய ஏரி, சித்தேரி என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. 2,720 ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்து காணப்படும் இந்த ஏரி கடந்த ஆண்டு பெய்த பருவ மழையின் காரணமாக கரைகளில் ஆங்காங்கே சேதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அதனை சீரமைத்து தர வேண்டும் என்று உத்திரமேரூர் சுற்று வட்டார கிராமப்புற விவசாயிகள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசின் பொதுப்பணி துறையின் மூலம் ரூ.18 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி உத்திரமேரூர் ஏரி புனரமைப்பு பணிகள் நேற்று தொடங்கப்பட்டது. விழாவில் காஞ்சீபுரம் எம்.பி. க.செல்வம், உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. க.சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு ஏரி புனரமைப்பு பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர். இதில் ஒன்றிய செயலாளர் உத்திரமேரூர் ஞானசேகரன், சாலவாக்கம் குமார், பேரூராட்சி செயலாளர் பாரிவள்ளல், உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிகுமார், பொதுப்பணி துறை செயற்பொறியாளர் செல்வகுமார், உதவி செயற்பொறியாளர் நீள்முடியான், இளம் பொறியாளர் மார்க்கண்டன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story