ரத்தன் டாடா மறைவு இந்திய நாட்டிற்கே பேரிழப்பு: எடப்பாடி பழனிசாமி


ரத்தன் டாடா மறைவு இந்திய நாட்டிற்கே பேரிழப்பு: எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 10 Oct 2024 3:20 AM GMT (Updated: 10 Oct 2024 7:01 AM GMT)

ரத்தன் டாடா மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது 86). இவர் கடந்த திங்கட்கிழமை சிகிச்சைக்காக மும்பை பிரீச்கேண்டி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் வயது முதிர்வு காரணமாக வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவரது உடல்நிலை மோசமானதாக நேற்று மாலை தகவல் வெளியானது.

இந்த நிலையில் நேற்று இரவு 12 மணியளவில் ரத்தன் டாடா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்தது. ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ரத்தன் டாடா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "டாடா குழுமத்தின் கவுரவத் தலைவர் ரத்தன் டாடா காலமானார் என்ற செய்திகேட்டு மிகுந்த துயருற்றேன். தன்னுடைய தொழில் நேர்மையினாலும், வள்ளல் தன்மையாலும், சமூக சேவையாலும் பலருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த தொழில் அதிபரான ரத்தன் டாடாவின் மறைவு இந்திய நாட்டிற்கே பேரிழப்பாகும்.

மறைந்த ரத்தன் டாடா அவர்தம் குடும்பத்தாருக்கும், டாடா நிறுவனத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். மறைந்த திரு. ரத்தன் டாடா அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story