காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x

குடிநீர் வராததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

குடிநீர்

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட காந்திநகரில் 1-ந் தேதியில் இருந்து 9-ந் தேதி வரை 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீப காலமாக 15 தினங்கள் 20 தினங்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வருகிறது. அந்த குடிநீரும் பயன்படுத்த முடியாத நிலைக்கு உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும் முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என்றும் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைமந்த அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் காந்திநகரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்க்கும் வரை சாலை மறியலை கைவிடமாட்டோம் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து வந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் புதுக்கோட்டை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு முறையாக குடிநீர் வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைதொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story