திருச்சி ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த புரோட்டா மாஸ்டர் கைது


திருச்சி ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த புரோட்டா மாஸ்டர் கைது
x

பஸ் கண்டக்டரை பழிவாங்குவதற்காக அவரது பெயரில் திருச்சி ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த புரோட்டா மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி

பஸ் கண்டக்டரை பழிவாங்குவதற்காக அவரது பெயரில் திருச்சி ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த புரோட்டா மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.

வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் நுண்ணறிவு பிரிவு வாட்ஸ் அப் எண்ணுக்கு கடந்த 23-ந் தேதி குறுஞ்செய்தி வந்தது. அதில், `நான் மனிதவெடிகுண்டு, இன்றைக்கு திருச்சி ரெயில்வே ஸ்டேஷனில் வெடிகுண்டு வைக்கப்போறேன். முடிந்தால் காப்பாற்று' என்று குறிப்பிட்டதோடு, ஆபாச வார்த்தைகளும் இடம் பெற்று இருந்தது. உடனே இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில், கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாட்ஸ் அப் எண்ணை வைத்து விசாரித்தனர். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் குழிபிறையை சேர்ந்த பஸ் கண்டக்டரான தேவராஜ் என்பவர் இதில் ஈடுபட்டதாக தெரியவந்தது.

புரோட்டா மாஸ்டர் கைது

உடனே அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் ஏற்கனவே தேவராஜ் போல் ஏமாற்றி பல்வேறு இடங்களுக்கு ஆபாச தகவல்கள் அனுப்பப்பட்டு இது தொடர்பாக அவர் சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளித்து இருந்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில் தேவராஜூக்கும் அவரது வீட்டின் அருகே வசித்து வரும் புரோட்டா மாஸ்டரான செல்வராஜூக்கும் (வயது 42) இடையே நிலத்தகராறு இருந்துள்ளது. இதனால் தேவராஜை பழிவாங்க செல்வராஜ் திட்டம் தீட்டியுள்ளார்.

அப்போது சாலையில் கிடந்த செல்போன் சிம்கார்டு ஒன்றை எடுத்து, அதில் தேவராஜ் பெயரில் ஐ.டி. உருவாக்கி உள்ளார். மேலும், தேவராஜின் புகைப்படத்தை வைத்து வாட்ஸ் அப் மூலம் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். விசாரணையில் போலீசாரிடம் செல்வராஜ் இதை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் செல்வராஜை கைது செய்தனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாரை கமிஷனர் பாராட்டினார்.


Next Story