நடமாடும் மருத்துவ குழுக்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல் வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆய்வுக்கூட்டம் - மேயர் தலைமையில் நடந்தது


நடமாடும் மருத்துவ குழுக்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல் வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆய்வுக்கூட்டம் - மேயர் தலைமையில் நடந்தது
x

வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆய்வுக்கூட்டம் மேயர் தலைமையில் நடந்தது. அப்போது நடமாடும் மருத்துவ குழுக்கள் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டது.

சென்னை

வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருக்கிறது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி சார்பில் ஆய்வுக்கூட்டம் சென்னை ரிப்பன் கட்டிட கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. ஆய்வுக்கூட்டத்துக்கு மேயர் பிரியா தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சியின் அனைத்து துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், பருவமழைக்கு முன்னதாக அந்த இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மழைநீர் வடிகால்களில் சுமார் 1,356 கிலோ மீட்டர் நீளத்துக்கு ரூ.71 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்கவும், வடிகால்களில் இருந்து அகற்றப்பட்ட வண்டல்களை சாலைகளில் தேக்கி வைக்காமல் உடனடியாக அப்புறப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுரங்கப்பாதைகள் மற்றும் கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய இடங்களில் மோட்டார் பம்புகளை தயார் நிலையில் வைக்கவும், மழையின் காரணமாக விழும் மரம் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் மர அறுவை எந்திரங்களை பராமரித்து தயார் நிலையில் வைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தின் போது பொதுமக்களை பாதுகாப்பாக மீட்டு தங்க வைக்கக்கூடிய 169 நிவாரண மையங்களை தயார் நிலையில் வைக்கவும், மழைக்கால வியாதிகளுக்கு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக, அமைக்கப்பட்டுள்ள 101 நடமாடும் மற்றும் நிலையான மருத்துவக் குழுக்களும் தயார்நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story