"மழை பெய்வதால் மின் தேவை குறைந்தது" - மின்துறை தகவல்


மழை பெய்வதால் மின் தேவை குறைந்தது - மின்துறை தகவல்
x

கோடை மழை காரணமாக வீடுகளில் ஏ.சி. பயன்பாடு உள்ளிட்ட அனைத்து மின்சாதனங்களின் பயன்பாடும் குறைந்தது.

சென்னை,

கோடை வெயில் காரணமாக தமிழ்நாட்டில் மின்தேவை உச்சபட்ச அளவை எட்டியது. மாநிலம் முழுவதும் மின்சாரத்தின் தேவை அதிகபட்சமாக 21 ஆயிரம் மெகாவாட் ஆக அதிகரித்தது. இதற்கிடையே தமிழ்நாட்டில் பரவலாக கோடை மழை பெய்ய தொடங்கியது. இதனால் வீடுகளில் ஏ.சி. பயன்பாடு உள்ளிட்ட அனைத்து மின்சாதனங்களின் பயன்பாடும் குறைந்தது.

இதனால் மின்சாரத்தின் தேவையும் கணிசமாக தற்போது குறைந்து உள்ளது. குறிப்பாக கடந்த 15-ந்தேதி மாலை 6.55 மணிக்கு 17 ஆயிரத்து 331 மெகா வாட்டாக குறைந்தது. இது தொடர்ந்து நேற்று அதிகாலை 4 மணி அளவில் 13 ஆயிரத்து 831 மெகாவாட்டும், காலை 7.40 மணி அளவில் 14 ஆயிரத்து 709 மெகாவாட் என்ற அளவில் மின்சாரத்தின் தேவை கணிசமாக குறைந்தது. இதனால் அனல் மின்சார நிலையத்தின் உற்பத்தியும் சற்று குறைக்கப்பட்டு உள்ளது. சோலார் மூலம் உற்பத்தியாகும் 4 ஆயிரத்து 120 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காற்றாலை சீசன் தொடங்காததால் 3 இலக்க எண்களிலேயே உற்பத்தி செய்து வருகிறது.

இதுதவிர மத்திய தொகுப்பில் இருந்து சுமார் 4 ஆயிரத்து 500 மெகாவாட் என்ற அளவில் பெறப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது என்று எரிசக்தித்துறை அதிகாரிகள் கூறினர்.


Next Story