பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் இன்று முதல் வினியோகம்


பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் இன்று முதல் வினியோகம்
x

பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் வினியோகிக்கப்படுகிறது.

சென்னை,

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு பொங்கலுக்கான பரிசு தொகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருக்கிறார். அதன்படி, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு ஒன்று மற்றும் ஆயிரம் ரூபாய் ஆகியவை வழங்கப்பட உள்ளன.

இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற 9-ந் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளன. பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்று தொடங்கிவைக்கிறார். அன்றைய தினமே தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.

டோக்கன் வினியோகம்

இந்த பொங்கல் தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் வழங்க அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது. அந்த டோக்கனில் பொங்கல் தொகுப்பை பெறும் நாள், நேரம் போன்ற தகவல்கள் இடம் பெற்றிருக்கும். அதைக் காட்டி ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பை ரேஷன் அட்டைதாரர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

டோக்கன்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 8-ந் தேதி வரை வழங்கப்பட உள்ளன. (6-ந் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் அன்று டோக்கன் வழங்கப்படாது). ஒரு நாளுக்கு 200 டோக்கன்களை அலுவலர்கள் வீடு வீடாக வந்து வழங்குவார்கள்.

குறைபாடுகள் இருந்தால்...

மேலும் அந்தந்த ரேஷன் கடைகளில் உள்ள தகவல் பலகையில், எந்தெந்த அட்டைதாரர்கள் எந்த தேதியில் வந்து பொங்கல் தொகுப்பை வாங்க வேண்டும் என்ற விவரங்கள் போடப்பட்டு இருக்கும். பொங்கல் தொகுப்பை மக்கள் தடையின்றி பெறுவதற்காக 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ரேஷன் கடைகள் இயங்கும்.

பொங்கல் தொகுப்பை பெற்றதும் அதுதொடர்பான தகவல், செல்போன் மூலம் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். பொங்கல் தொகுப்பில் குறைபாடுகள் இருந்தால் அதுபற்றி இலவச தொலைபேசி எண்களான 1967 மற்றும் 18004255901 ஆகிய எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story