பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு - 10 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி


பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு - 10 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
x

மதமாற்றத்தில் ஈடுபட்டவர்களை தட்டிகேட்டதற்காக பாமக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேரின் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை,

கும்பகோணம் அருகில் மதமாற்றத்தில் ஈடுபட்டவர்களை தட்டிகேட்டதற்காக பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேரின் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருபுவனத்தில் மதமாற்றத்தை தட்டிக் கேட்டதற்காக பாமக பிரமுகர் ராமலிங்கம், கடந்த 2019 வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முகமது அசாருதீன், நிஜாம் அலி, சபருதீன் உள்பட 18 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்த தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் (என்ஐஏ), 13 பேரை கைது செய்தனர். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேர் தலைமறைவாக உள்ளனர்.

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கிற்கான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முகமது அசாருதீன், நிஜாம் அலி, சபருதீன் உள்ளிட்ட 10 பேர் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் பாதுகாக்கப்பட்ட சாட்சிகளின் விசாரணையை தொடங்காமல், ஏற்கெனவே விசாரித்த சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்யாமலும் தாமதித்துள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். சாட்சிகள் விசாரணை முடிந்தால் உடனடியாக குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியதை கீழமை நீதிமன்றம் புறக்கணித்துள்ளதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதேநிலை நீடித்தால் வழக்கில் சாட்சி விசாரணை முடிய மேலும் 10 ஆண்டுகள் ஆகும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தாமதமில்லாமல் பாதுகாக்கப்பட்ட சாட்சிகளின் விசாரணையையும், மற்ற சாட்சிகளின் குறுக்கு விசாரணையையும் விரைந்து முடிக்க வேண்டும் என கீழமை கோர்ட்டுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், முதலில் பாதுகாக்கப்பட்ட சாட்சிகளை விசாரிக்க வற்புத்தமாட்டோம் எனக் கூறிய குற்றம்சாட்டப்பட்ட தரப்பு, தற்போது அவர்களிடம் விசாரணை நடத்தவில்லை என்ற காரணத்தையே கூறி, ஜாமீன் கேட்க முடியாது என்று கூறி, 10 பேரின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story