பெரம்பலூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி்


பெரம்பலூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி்
x

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி பெரம்பலூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி்யை கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர்

மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து மாநில நெடுஞ்சாலைகளிலும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றும், இதனால் மாநில நெடுஞ்சாலைகளில் இடைவெளி இல்லாமல் மரங்கள் வளர்க்கப்படும் என்ற இலக்கு எட்டப்படும் என்றும் 2023-24-ம் ஆண்டு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பிற்கிணங்க, கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்க நாளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் விழுப்புரம், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்டத்திற்குட்பட்ட, நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பெரம்பலூர் கோட்டத்தின் மூலம் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் அரசு சாலைகளின் ஓரங்களில் 5 ஆயிரம் எண்ணிக்கைகள் கொண்ட பலவகை மரக்கன்றுகள் நடும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் கற்பகம் கலந்து கொண்டு மாநில நெடுஞ்சாலையான பெரம்பலூர் புறவழிச்சாலையில் ஆலம்பாடி பகுதியில் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். இதில் நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பெரம்பலூர் கோட்டம், உட்கோட்டங்களின் பொறியாளர் கலைவாணி, பெரம்பலூர் உதவி கோட்ட பொறியாளர் மாயவேலு, உதவி பொறியாளர் ஆறுமுகம் மற்றும் சாலை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story