சாய ஆலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு


சாய ஆலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 19 Jun 2023 1:22 PM GMT (Updated: 20 Jun 2023 10:07 AM GMT)

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், கரைப்புதூர் குன்னாங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், 'எங்கள் ஊரில் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் தனியார் ஒருவர் சாய ஆலையை 2 ஏக்கர் நிலத்தில் அமைக்க முயற்சி செய்து வந்தது தெரியவந்தது. இதை எதிர்த்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் தனியார் தனது நிலத்தை வேறு நபர்களுக்கு வாடகை விட்டு, அந்த இடத்தில் வேறு நபர்கள் சாய ஆலை அமைக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

சம்பந்தப்பட்ட இடத்துக்கு அருகே அரசு பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். வீடுகள் அருகில் உள்ளன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் உள்ளது. அதற்கு அருகே ஓடை செல்கிறது. நிலத்தடி நீர் பாதிக்கப்படும். சுற்றுச்சூழல் அதிகாரிகளிடம் தெரிவித்தால் ஏற்கனவே அனுமதி கொடுத்துவிட்டதாக தெரிவிக்கிறார்கள். அருகில் பள்ளி இருந்தும் எவ்வாறு அனுமதி கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. தாசில்தார் அலுவலகம், கரைப்புதூர் ஊராட்சி அலுவலகங்களில் ஏற்கனவே மனு கொடுத்துள்ளோம். எங்கள் பகுதியில் சாய ஆலை அமைப்பதை கைவிட வேண்டும். சாய ஆலைக்கு அனுமதி அளிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story