பெற்றோர்களே உஷார்... குளிர்சாதன பெட்டியை திறந்த 5 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு


பெற்றோர்களே உஷார்... குளிர்சாதன பெட்டியை திறந்த 5 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
x

கோப்புப்படம்

குளிர்சாதன பெட்டியை திறந்த 5 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி,

சென்னை ஆவடி நந்தவன மேட்டூர் நேதாஜி தெருவை சேர்ந்தவர் கவுதம்- பிரியா தம்பதிகளுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களது மூத்த மகள் ரூபாவதி (5). ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை சிறுமி தனது வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியை திறந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக குளிர்சாதன பெட்டியில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு சிறுமி ரூபாவதி மீது மின்சாரம் பாய்ந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், குழந்தையை தூக்கிக் கொண்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் ரூபாவதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குளிர்சாதன பெட்டியை திறந்த போது மின்சாரம் தாக்கி 5 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story