காதலி இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை...!


காதலி இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை...!
x

காதலி இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி,

காதலி தற்கொலை

புதுவை தேங்காய்த்திட்டு புதுநகர் வைகை வீதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ண சாய் (வயது 19). இவர் கல்லூரியில் பட்டபடிப்பு 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் அதே பகுதியை சேர்ந்த தன்னைவிட 3 வயது மூத்தவரான அஞ்சலி என்ற பெண்ணை காதலித்து வந்தார். இதை அறிந்த அஞ்சலியின் பெற்றோர், அவரை கண்டித்தனர். பல முறை சந்தித்தும் ராமகிருஷ்ணசாய் சரிவர பேசவில்லை. அத்துடன் அஞ்சலியின் செல்போன் அழைப்பையும் எடுப்பதில்லையாம்.

இதனால் மனவேதனை அடைந்த அஞ்சலி கடந்த மாதம் 17-ந்தேதி விநாயகர் கோவில் வீதியில் உள்ள ராமகிருஷ்ண சாயின் வீட்டிற்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மறக்க முடியாமல் தவிப்பு

இந்தநிலையில் ராமகிருஷ்ண சாயின் பெற்றோர் அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டிற்கு மாறியுள்ளனர். காதலி நினைவாக இருந்த ராமகிருஷ்ணசாயை அவரது பாட்டி வீட்டிற்கும் அனுப்பி வைத்தனர்.

இருந்தபோதிலும் காதலியை மறக்க முடியாமல் அவர் தவித்து வந்தார். காதலி சென்ற இடத்துக்கே தானும் செல்வது என அவர் முடிவு செய்தார்.

அதன்படி பாட்டி வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது காதலி தூக்குப்போட்டு இறந்த பழைய வீட்டிற்கு வந்து அங்குள்ள சமையல் அறையில் தூக்குப்போட்டு தொங்கினார்.

தற்கொலை

மறுநாள் காலையில் அவரது அண்ணன் வாசுதேவனின் நண்பரான குமாரதேவன் எழுந்து வந்து பார்த்தபோது, ராமகிருஷ்ணசாயின் மோட்டார் சைக்கிள் நிற்பதை பார்த்து தகவல் தெரிவித்துள்ளார்.

அங்கு வந்து வாசுதேவன் பார்த்தபோதுதான் ராமகிருஷ்ணசாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.


Next Story