தூத்துக்குடி அருகேவாராஹி அம்மனுக்கு 2025 கிலோ கிழங்கு மஹா யாகம்


தூத்துக்குடி அருகேவாராஹி அம்மனுக்கு 2025 கிலோ கிழங்கு மஹா யாகம்
x
தினத்தந்தி 17 Oct 2023 6:45 PM GMT (Updated: 17 Oct 2023 6:46 PM GMT)

தூத்துக்குடி அருகே வாராஹி அம்மனுக்கு 2025 கிலோ கிழங்கு மஹா யாகம் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் அய்யனடைப்பில் மஹா பிரத்தியங்கிராதேவி- மஹா காலபைரவர் சித்தர் பீட ஆலயம் அமைந்து உள்ளது. இந்த ஆலயத்தில் தென்தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத தனிச்சிறப்பாக ஸ்ரீசித்தர் பீடத்தில் வாராஹி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். வெற்றிகளை அள்ளித்தந்திடும் வாராஹி அம்மனை வாரம்தோறும் வணங்கினால் வேண்டும் வரம் யாவும் கிட்டும் என்பது ஐதீகமாகும்.

இதனை தொடர்ந்து புரட்டாசி மஹாளய அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தில் பருவமழை நன்கு பெய்து பசுமை வளம் சிறக்கவேண்டியும், உலகமக்கள் கொடும் நோய்கள் இன்றி நலமாக வாழவேண்டியும் மற்றும் வாழ்வில் கடன்தொல்லைகள் நீங்கி இல்லத்தில் செல்வம் பெருகிடவும், கல்வி வளம் மேம்படவும், நல்ல அரசு வேலை கிடைக்கவும், நோய்கள், வழக்குகள் தீர்ந்திடவும் என அனைத்து மக்களும் நலம்பெற்றிடவும் வேண்டி வாராஹி அம்மனுக்கு 2025 கிலோ கிழங்கு யாகம் சற்குரு சீனிவாசசித்தர் தலைமையில் நடந்தது.

காலை 9.50 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமமும், காலை 10 மணிக்கு வாராஹி அம்மனுக்கு சிறப்பு ஹோமமும் நடந்தன. 11 மணிக்கு வாராஹி அம்மனுக்கு மிகவும் பிடித்தமான சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, சீனிக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சிறுகிழங்கு, பனங்கிழங்கு, ராசவள்ளிக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு மற்றும் கேரட், பீட்ரூட் பூமிக்கு அடியில் விளையும் அனைத்து வகையான பொருட்களும் சேர்த்து 2025 கிலோ கிழங்கு வகைகள் கொண்டு மஹா யாகம் நடந்தது. மதியம் 12.30 மணிக்கு வாராஹி அம்மன், மஹா பிரத்தியங்கிராதேவி, காலபைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரமும், மதியம் 12.50 மணிக்கு தீபாரதனையும் நடந்தது. மாலை 4.30 மணிக்கு சிறப்பு வழிபாடுகள் நிறைவுறுதல் பூஜையும், மாலை 5 மணிக்கு தீபாரதனையும் நடந்தது.

நிகழ்ச்சியை முன்னிட்டு காலை முதல் இரவு வரை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. யாகத்துக்கான ஏற்பாடுகளை சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வழிபாட்டு குழுவினர், மகளிர் அணியினர் செய்து இருந்தனர்.


Next Story