நம்பெருமாள் வசந்த உற்சவம் தொடங்கியது


நம்பெருமாள் வசந்த உற்சவம் தொடங்கியது
x

நம்பெருமாள் வசந்த உற்சவம் தொடங்கியது.

திருச்சி

ஸ்ரீரங்கம்:

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. இந்த உற்சவம் வருகிற ஜூன் 4-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. வசந்த உற்சவத்தின் முதல் நாளான நேற்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேர்ந்தார்.

அங்கு அலங்காரம், அமுது செய்து சூர்ணாபிஷேகம் கண்டருளினார். பின்னர் வசந்த மண்டபத்தில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். வசந்த உற்சவத்தின் 7-ம் நாளன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளுகிறார். 9-ம் நாளன்று நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். மேலும் தீர்த்தவாரி மற்றும் திருமஞ்சனம் கண்டருளுகிறார். வசந்த உற்சவத்தின்போது 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும் மஞ்சள் பொடியினை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நடைபெறும். நம்பெருமாள் வசந்த உற்சவ நாட்களில் இரவு 8 மணிக்கு பிறகு ஆரியப்பட்டாள் வாசலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story