7 ஊர்களில் முத்தாலம்மன் கோவில் திருவிழா


7 ஊர்களில் முத்தாலம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 13 Oct 2023 11:30 PM GMT (Updated: 13 Oct 2023 11:30 PM GMT)

பட்டிவீரன்பட்டி உள்பட 7 ஊர்களில் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

திண்டுக்கல்

பட்டிவீரன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள தேவரப்பன்பட்டி, சின்னகவுண்டன்பட்டி, சின்ன அய்யம்பாளையம், பெரிய அய்யம்பாளையம், நெல்லூர், சித்தரேவு ஆகிய 7 ஊர்களில் முத்தாலம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி திருவிழா ஒரே நேரத்தில் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான புரட்டாசி திருவிழா ஒவ்வொரு ஊரிலும் உள்ள முத்தாலம்மன் கோவில்களில் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி 15 நாட்களாக பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்து வந்தனர். இந்தநிலையில் 11-ந்தேதி அன்று எல்லை காவல்கார சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்பிறகு சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய முத்தாலம்மனை கோவிலுக்கு அழைத்து வந்தனர். அங்கு அம்மனுக்கு கண் திறப்பு, தங்க ஆபரண அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

திருவிழாவின் 2-ம் நாளான நேற்று முன்தினம் மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், அக்னிசட்டி எடுத்தல், கிடா வெட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவின் கடைசி நாளான நேற்று ஒவ்வொரு ஊரிலும் மேளதாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் முத்தாலம்மன் சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி முளைப்பாரி ஊர்வலத்துடன் பூஞ்சோலைக்கு சென்றடையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பிறகு அம்மன் மஞ்சள் நீராடி பூஞ்சோலைக்கு சென்றடையும் வைபவத்துடன் திருவிழா நிறைவு பெற்றது. இந்த திருவிழாவையொட்டி 7 ஊர்களிலும் வழுக்கு மரம் ஏறுதல், உறி அடித்தல், பெண்கள் பாட்டுபாடி கும்மி அடித்தல், கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், பட்டிவீரன்பட்டி உள்பட 7 ஊர்களையும் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.


Next Story