மும்பை விபத்து எதிரொலி... சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்


மும்பை விபத்து எதிரொலி... சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்
x

சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை,

மராட்டிய மாநிலம் மும்பையில் கடந்த 13ம் தேதி மாலை திடீரென வீசிய புழுதிப் புயலில், காட்கோபார் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 120 அடி உயர ராட்சத விளம்பரப் பலகை அடியோடு சரிந்து அருகில் இருந்த பெட்ரோல் பங்கின் மேற்கூரை மீது விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து மாநிலத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்த நிலையில், சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற மாநகராட்சி மண்டல அலுவலருக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசியதாவது;

"விளம்பர பலகை நிறுவ இதுவரை மாநகராட்சிக்கு 1,100 விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில், அவற்றில் 40 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. கடந்த 2 நாட்களில் அனுமதியின்றியும், உரிய அளவீடுகளை தாண்டியும் வைக்கப்பட்ட 460 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர பலகைகளும் அகற்றப்படும். சாலையோரம், கல்வி நிறுவனங்கள், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்றார்.


Next Story