மோட்டார் சைக்கிள்-ஆட்டோ மோதல்; பா.ம.க. மகளிரணி பிரமுகரின் மகன் பலி


மோட்டார் சைக்கிள்-ஆட்டோ மோதல்; பா.ம.க. மகளிரணி பிரமுகரின் மகன் பலி
x
தினத்தந்தி 22 Jun 2023 6:45 PM GMT (Updated: 22 Jun 2023 6:46 PM GMT)

விருத்தாசலத்தில் மோட்டார் சைக்கிள்-ஆட்டோ மோதிய விபத்தில் பா.ம.க. மகளிரணி பிரமுகரின் மகன் பலியானார்.

கடலூர்

விருத்தாசலம்:

விருத்தாசலம் புதுப்பேட்டையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் செந்தமிழன்(வயது 20). கட்டிட மேற்பார்வையாளரான இவர் நேற்று, மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டை சாலையில் விருத்தாசலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். வயலூர் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த ஆட்டோ மோதியது. இந்த விபத்தில் செந்தமிழன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் விரைந்து சென்று செந்தமிழன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் ஆட்டோ சாய்ந்ததில் அதில் வந்த பூபதி (65) என்ற மூதாட்டியும் காயமடைந்தார். அவர், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆட்டோ மோதி பலியான செந்தமிழனின் தாய் தில்லை, கடலூர் மாவட்ட பா.ம.க. மகளிர் அணி துணை செயலாளராக உள்ளார். தில்லைக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். இவரது பிறந்த நாளில் மகன் விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story