மகள் திருமண பத்திரிகையில் உறவினர் பெயரை சேர்க்காததால் தாய் தற்கொலை


மகள் திருமண பத்திரிகையில் உறவினர் பெயரை சேர்க்காததால் தாய் தற்கொலை
x
தினத்தந்தி 13 May 2024 9:28 AM GMT (Updated: 13 May 2024 10:15 AM GMT)

திருமண பத்திரிக்கை அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

கடலூர்,

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ருத்ரசோலை மேலத்தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 52). கொத்தனார். இவருடைய மனைவி மாலதி (38). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் மகள் சத்யகலாவுக்கு வருகிற 27-ந்தேதி திருமணம் நடைபெற இருந்தது.

இதற்காக திருமண பத்திரிக்கை அச்சடித்து உறவினர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் திருமண பத்திரிக்கையில் மாலதியின் உறவினர் ஒருவரின் பெயர் போடவில்லை என்று கூறப்படுகிறது. இது பற்றி மாலதி கணவர் கமலக்கண்ணனிடம் கேட்டு சண்டை போட்டார். இதில் 2 பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில், மனமுடைந்த மாலதி தனது வீட்டுபின்புறம் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் காட்டுமன்னார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாலதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story