தாராசுரம் பகுதியில் குரங்குகள் அட்டகாசம்


தாராசுரம் பகுதியில் குரங்குகள் அட்டகாசம்
x

கும்பகோணம் அருகே தாராசுரம் பகுதியில் குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

கும்பகோணம் அருகே தாராசுரம் பகுதியில் குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தாராசுரம்

கும்பகோணம் தாராசுரம் பகுதியில் குட்டியான் தெரு, மல்லுக தெரு் ஆகிய தெருக்கள் உள்ளன. இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வெள்ளி, பித்தளை பட்டறை தொழிற்சாலைகளும் அதிகளவில் உள்ளன. இதனால் இந்த பகுதியில் எப்போதும் போக்குவரத்து, ஆள்நடமாட்டம் இருக்கும்.இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கண்ட பகுதியில் குரங்குகள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை காலை மற்றும் மாலை நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்துவிடுகின்றன.

குரங்குகள் அட்டகாசம்

மேலும், வீடுகளில் உள்ள தென்னை மரங்கள், மாமரத்தில் ஏறி அட்டகாசம் செய்கின்றன. சாலையில் அங்கும், இங்கும்ஓடித்திரிவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். வீடுகளில் இருக்கும் உணவு பொருட்கள், செல்போன், பாத்திரங்களையும் தூக்கி செல்கின்றன. இதன்காரணமாக அந்த பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மேலும் சாலையில்நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளையும் குரங்குகள் கடிக்க செல்கின்றன. இதனால் அந்த வழியாக அச்சத்துடன் சென்று வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாராசுரம் பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.


Next Story