கல்லூரி விடுதியில் ஊசி போட்டு மருத்துவ மாணவி தற்கொலை


கல்லூரி விடுதியில் ஊசி போட்டு மருத்துவ மாணவி தற்கொலை
x

குமரியில் கல்லூரி விடுதியில் ஊசி போட்டு மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரியில் கல்லூரி விடுதியில் ஊசி போட்டு மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

மருத்துவ மாணவி

தூத்துக்குடி வி.டி.சி. நகரைச் சேர்ந்தவர் சிவகுமார். வியாபாரி. இவருடைய மகள் சுகிர்தா (வயது 27). இவர் குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் முதுநிலை மருத்துவம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்த இவர் நேற்று கல்லூரிக்கு செல்லவில்லை. இதனால் 2 மாணவிகள் அவரை தேடி விடுதி அறைக்கு சென்றனர்.

ஆனால் அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது சுகிர்தா மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே பதற்றமடைந்த இருவரும் கல்லூரியில் இருந்தவர்களிடம் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் விரைந்து வந்து சுகிர்தாவை பரிசோதித்த போது அவர் இறந்த அதிர்ச்சி தகவல் தெரிந்தது.

விடுதி அறையில் பிணமாக கிடந்தார்

இதுகுறித்து குலசேகரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே இன்ஸ்பெக்டர் பாலமுருகன், திருவட்டார் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜானகி மற்றும் போலீசார் விரைந்து வந்து சுகிர்தா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அதே சமயத்தில் கல்லூரி விடுதியில் மாணவியின் அறையில் போலீசார் சோதனை செய்த போது ஊசி மற்றும் மருந்து சிக்கியது. மாணவிக்கு சொந்தமான மடிக்கணினி, செல்போனையும் கைப்பற்றினர்.

மேலும் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது தொடர்பாக மாணவி எழுதிய கடிதத்தையும் போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. பின்னர் தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதய சூரியன் சுகிர்தாவுடன் படிக்கும் மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். மேலும் திருவட்டார் வருவாய் ஆய்வாளர் அமுதா சார்பிலும் கல்லூரியில் விசாரணை நடத்தப்பட்டது.

ஊசி போட்டு தற்கொலை

ஊசி மற்றும் மருந்து போன்றவை மாணவி சுகிர்தா அறையில் சிக்கியதை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், தசையை தளர்வடைய செய்யும் மருந்தை ஊசி மூலம் தன்னுடைய உடலில் செலுத்தி சுகிர்தா தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த தற்கொலை தொடர்பாக குலசேகரம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி விடுதியில் மருத்துவ மாணவி ஊசி போட்டு தற்கொலை செய்த சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story