கிணற்றில் ஆண் பிணம்


கிணற்றில் ஆண் பிணம்
x

திருவட்டார் அருகே கிணற்றில் ஆண் பிணம் போலீசார் விசாரணை

கன்னியாகுமரி

திருவட்டார்,

திருவட்டாரை அருகே உள்ள இட்டகவேலி நெல்லிவிளை புத்தன்வீடு பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி. இவருக்கு 5 மகள்களும், அனிக்குட்டன் (வயது 37) என்ற ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. அனிக்குட்டனுக்கு வலிப்பு நோய் அடிக்கடி ஏற்பட்டு வந்ததால் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். சம்பவத்தன்று குமாரசாமி வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது, வீட்டில் அனிக்குட்டனை காணவில்லை. குமாரசாமி பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. மாலையில் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் அனிக்குட்டன் மூழ்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி அனிக்குட்டனை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போது அனிக்குட்டன் தண்ணீரில் முழ்கி இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து குமாரசாமி கொடுத்த புகாரின் பேரின் திருவட்டார் சப்-இன்ஸ்பெக்டர் ஞானதாஸ் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அனிக்குட்டன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story