மதுரை: எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு ரத்து


மதுரை: எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு ரத்து
x

மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை,

மதுரை-தூத்துக்குடி இடையே நான்கு வழிச்சாலை உள்ளது. தொழில்வழித்தடமாகவும் இந்த சாலை முக்கியத்துவம் பெற்று விளங்கி வருகிறது. தூத்துக்குடி துறைமுகத்துக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த சாலை வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.

கடந்த 2 ஆண்டுகளாக இந்த சாலை குண்டும், குழியுமாக காட்சியளிப்பதால் வாகனங்களில் செல்பவர்கள் சிரமப்பட்டு வந்தனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. மேலும் நான்கு வழிச்சாலையின் இருபுறமும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். நான்கு வழிச்சாலையில் இருந்து ஒவ்வொரு ஊர்களுக்கு செல்லும் சாலை சந்திப்புகளிலும் மின் விளக்குகள் எரிவதில்லை என வாகன ஓட்டிகள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. மதுரை-தூத்துக்குடி நெடுஞ்சாலையில் உள்ள எலியார்பத்தி சுங்கச்சாவடியிலும் கட்டணம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அந்த சாலை சீர் செய்யப்படாமல் உள்ளதால் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. மேலும் சேதம் அடைந்த மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story