கோடைகாலம் முடிவதற்குள் ஏரி, குளங்கள், வாய்க்கால்களை தூர்வார வேண்டும் - ஜி.கே.வாசன்


கோடைகாலம் முடிவதற்குள் ஏரி, குளங்கள், வாய்க்கால்களை தூர்வார வேண்டும் - ஜி.கே.வாசன்
x
தினத்தந்தி 14 May 2024 5:35 AM GMT (Updated: 14 May 2024 5:50 AM GMT)

மழை தண்ணீரை சேமிக்கும் திட்டத்தை கர்மவீரர் காமராஜர் ஆட்சிக்குப்பிறகு எந்த ஆட்சியாளரும் செய்யவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

சென்னை,

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

தமிழக தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நேற்று முதல் வரும் 18-ம் தேதி வரை பரவலாக மழை இருக்கும் என்று சென்னை வானிலை நிலையம் அறிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் குறிப்பாக தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது. கடுமையான கோடை வெயிலுக்கு பிறகு இடையில் நான்கு, ஐந்து நாட்களாக பல மாவட்டங்களில் பெய்த மழையின் காரணமாக தண்ணீர் சாலைகளின் பல இடங்களில் குளம் போல் தேங்கியுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது எச்சரிக்கையை அளித்த போதும், வேளான் ஒழுங்குமுறை விற்பனை கூடமும், தமிழக அரசும் தகுந்த முன்னேற்பாடுகள் செய்யாமல் இருந்ததால் பல்வேறு இடங்களில் அறுவடை செய்து விற்பனைக்கு வந்த நெல்மணிகளும், கொள்முதல் செய்த நெல்மணிகளும் உரிய பாதுகாப்பு இல்லாமல் மழையில் நனைந்து வீணாகியுள்ளது.

இது தமிழக அரசின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செல்லம்பட்டியில் கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. பாதிப்புகளை கண்டறிந்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கடைமடைகளுக்கு எளிதாக செல்லும் வகையில் வாய்க்கால்களை தூர்வார வேண்டும். அதோடு கோடை காலங்களில் ஏரி, குளங்களையும் தூர்வாரி தண்ணீரை சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை அளிக்கும் மழை தண்ணீரை சேமிக்கும் திட்டத்தை கர்மவீரர் காமராஜர் ஆட்சிக்குப்பிறகு எந்த ஆட்சியாளரும் செய்யவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

இனிமேலும் காலதாமதம் செய்யாமல் கோடைகாலம் முடிவதற்குள் மழைநீர் வடிகால் பணியையும், போக்குவரத்து சாலைகளை செப்பனிட்டும், இப்பணிகளை ஒருகாலக் கெடுவுக்குள் முடித்து மக்கள் பயனடைய உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Next Story