லாரி மோதி தொழிலாளி பலி


லாரி மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 10 Dec 2022 7:00 PM GMT (Updated: 10 Dec 2022 7:00 PM GMT)

லாரி மோதி தொழிலாளி பலி

திண்டுக்கல்


சத்திரப்பட்டி அருகே உள்ள வீரலப்பட்டி பிரிவு, கலைஞர் நகரை சேர்ந்தவர் பாண்டித்தேவர் (வயது 65). கூலித்தொழிலாளி. நேற்று காலை இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பேரன் கார்த்திக்ராஜாவுடன் (25) மோட்டார் சைக்கிளில் ஒட்டன்சத்திரம் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை கார்த்திக்ராஜா ஓட்டினார். விருப்பாச்சி ஆத்துப்பாலம் பகுதியில் சென்ற போது அந்த வழியாக திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்த டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பாண்டித்தேவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். கார்த்திக்ராஜா அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த சத்திரப்பட்டி போலீசார் விரைந்து சென்று பாண்டித்தேவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story