கள்ளக்குறிச்சி சம்பவம்: கவர்னர் ஆர்.என்.ரவியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு


கள்ளக்குறிச்சி சம்பவம்: கவர்னர் ஆர்.என்.ரவியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
x

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் கிராமத்தில் விஷ சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

தமிழகத்தையே பெரும் அதிா்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, ஓய்வுபெற்ற ஐகோா்ட்டு நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபா் ஆணையம் அமைக்கப்பட்டு, இச்சம்பவம் தொடா்பாக அவர் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித்தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 61 பேரும், எம்.பி.க்கள் 3 பேர் என அனைவரும் கவர்னரை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது விஷ சாராய விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை கோரி, கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார்.


Next Story