கொசவபட்டியில் 20-ந்தேதி ஜல்லிக்கட்டு; வாடிவாசல் அமைக்கும் பணி தீவிரம்

கொசவபட்டியில் வருகிற 20-ந்தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள நிலையில் அங்கு வாடிவாசல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
சாணார்பட்டி அருகே கொசவபட்டியில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு வருகிற 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில், திண்டுக்கல், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்க உள்ளன. அதேபோல் காளைகளை அடக்குவதற்கு திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பார்கள்.
இந்தநிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு கொசவப்பட்டியில் வாடிவாசல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து ரசிக்கும் வகையில் பார்வையாளர்கள் கேலரி அமைக்கும் பணி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கொசவபட்டி ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.