பெண் தபேதாரின் பணியிட மாற்றத்துக்கு காரணம் மேயரின் அகங்காரமா? - தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி


பெண் தபேதாரின் பணியிட மாற்றத்துக்கு காரணம் மேயரின் அகங்காரமா? - தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி
x

பெண் தபேதார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக விசாரணை தேவை என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை மேயர் பிரியாவின் தபேதாராக மாதவி (50 வயது) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதார் ஆவார். சென்னை மாநகராட்சி கூட்டம் உள்பட முக்கிய நிகழ்ச்சிகளில் மேயர் பிரியா பங்கேற்கும்போது அவருடன் தபேதார் மாதவி செல்வார்.

மாதவி உதட்டில் கலர் கலராக 'லிப்ஸ்டிக்' பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர். கடந்த மாதம் மேயர் பிரியாவின் நிகழ்ச்சியில் பங்கேற்ற தபேதார் மாதவி 'லிப்ஸ்டிக்' பயன்படுத்தி உள்ளார். இதனை மேயர் பிரியாவின் உதவியாளர் கண்டித்தார். இந்த நிலையில் தபேதார் மாதவி திடீரென்று மணலி மண்டலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பணியில் அலட்சியம், உரிய நேரத்தில் பணிக்கு வராதது, அலுவலக உத்தரவை பின்பற்றாதது ஆகிய காரணங்களினால் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

லிப்ஸ்டிக் பூசி பணிக்கு வரக்கூடாது என்ற உத்தரவை மீறியதாலேயே தான் தண்டிக்கப்பட்டுள்ளதாக தபேதார் மாதவி குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தபேதார் மாதவியின் இடமாற்றத்துக்கும், லிப்ஸ்டிக் விவகாரத்துக்கும் சம்பந்தமில்லை என்றும் அவர் பணிக்கு சரிவர வராத காரணத்தால்தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும் சென்னை மேயர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த நிலையில் பெண் தபேதார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக விசாரணையும் விளக்கமும் தேவை என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னை மாநகராட்சியின் பெண் தபேதார் பணியிடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டதற்கான காரணங்கள் ஒன்று சொன்னாலும், வேறு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

அவர் மாற்றம் செய்யப்பட்டதற்கு காரணம், மேயரின் அதிகாரமா? தபேதாரின் பெண் உரிமையின் அலங்காரமா? தவேதாரின் அலங்காரத்தை பொறுத்துக்கொள்ளாத மேயரின் அகங்காரமா? பெண் ஊழியர் தானே என்ற இளக்காரமா? விசாரணை தேவை... விவரமும் தேவை... விளக்கமும் தேவை... சமூக நீதிப் பேசும் திராவிட மாடல் அரசின் மற்றொரு சமூக அநீதி இது" என்று தெரிவித்துள்ளார்.


Next Story