கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மீண்டும் கேட்பது சரியா?


கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மீண்டும் கேட்பது சரியா?
x

கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வருவது ஏற்புடையதா? என்பது குறித்து கல்வியாளர், ஆசிரியர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

புதுக்கோட்டை

மாநிலப்பட்டியலில் கல்வி

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைக்கும் போது, கல்வியை மத்திய பட்டியலில், மாநில பட்டியலில் அல்லது பொது பட்டியலில் இவற்றில் எதில் சேர்ப்பது என்பது நீண்ட விவாதத்திற்கு பிறகே இறுதியில் கல்வி மாநில பட்டியலில் இருப்பதுதான் சரியானது என்று முடிவு செய்து, கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்த்தனர்.

இந்தியாவில் 1975-ம் ஆண்டு முதல் 1977-ம் ஆண்டு வரை அமலில் இருந்த அவசர காலகட்டத்தில் (எமர்ஜென்சி) காடுகள் நிர்வாகம், கல்வி, எடை மற்றும் அளவியல், விலங்குகள், பறவைகள் பாதுகாப்பு ஆகிய 5 முக்கிய துறைகள் அரசமைப்பு சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 42-வது சட்டத் திருத்தத்தின் மூலம், மாநில கட்டுப்பாட்டில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டன. இது ஒத்திசைவுப் பட்டியல் என்று அழைக்கப்படுகிறது.

சர்தார் ஸ்வரண்சிங் அளித்த அறிக்கையின் அடிப்படையில் அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். இதனால் இந்த துறைகளின் அதிகாரங்களில் மாநில சட்டப்பேரவைகளுக்கு இருந்த முழு அதிகார வரம்பு, பொதுப் பட்டியலுக்கு மாறியது.

மீண்டும் கொண்டு வரவேண்டும்

மாநில அரசுகளின் எந்தவித முன் அனுமதியும் இன்றி, முறையான சட்ட விதிகளை பின்பற்றாமல், அவசர காலத்தில் இந்த சட்டம் இயற்றப்பட்டது என்று அப்போது முதல் தற்போது வரை விமர்சனத்துக்குள்ளாகிய வண்ணமே இருக்கின்றன.

கல்வித் துறையை பொதுப் பட்டியலில் இருந்து மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என்ற குரல் இதற்கு முன்பு முதல்-அமைச்சர்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா தொடங்கி பல ஆண்டுகளாக வலுத்துக் கொண்டே இருந்தாலும், தற்போது வரை கல்வி பொதுப் பட்டியலிலேயே நீடித்து வருகிறது.

கல்வி மாநிலப் பட்டியலில் இல்லாமல், பொதுப் பட்டியலில் இருப்பதால் தான், நீட் தேர்வுகள், புதிய தேசிய கல்விக் கொள்கை போன்றவை மத்திய அரசு மூலம் அமல்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, தி.மு.க., அ.தி.மு.க. உள்பட சில கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் இந்த அம்சங்கள் முன்வைக்கப்பட்டன.

பிரதமரிடம் வலியுறுத்திய மு.க.ஸ்டாலின்

இதுதவிர, இதுதொடர்பான வழக்குகள் சென்னை ஐகோர்ட்டிலும் இருக்கின்றன. நாடாளுமன்றத்திலும் இதுகுறித்த விவாதங்கள் முன்வைக்கப்பட்டு இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், கடந்த 11.11.2022 அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடந்த பட்டமளிப்பு விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இதுதொடர்பான கோரிக்கையையும் வலியுறுத்தினார்.

அதில், 'அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த போது முதலில் கல்வி மாநிலப் பட்டியலில்தான் இருந்தது. அவசர காலத்தின் போது அது பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. எனவே கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற முயற்சிக்க வேண்டும் என்று மத்திய அரசையும், குறிப்பாக பிரதமரையும் கேட்டுக்கொள்கிறேன்' என்று தெரிவித்தார். இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியது பற்றி, கல்வியாளர், ஆசிரியர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர்கள் அளித்த கருத்துகள் வருமாறு:-

கூட்டாட்சி தத்துவம்

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு:- '1976-ல் கல்வி ஒத்திசைவுப் பட்டியலுக்கு செல்வதற்கு முன்பு, மாநில பட்டியலில் இருந்த வரை மாநில அரசு கல்லூரிகள், பள்ளிகள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வந்தது. எப்போது பொதுப்பட்டியலுக்கு அது சென்றதோ, அப்போதில் இருந்து கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி அதிகம் இருந்தாலும், அதில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம்தான் அதிகம் உள்ளது. மத்திய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்கள் அனைத்து சிறப்பு கல்வி நிறுவனங்களாகவே இருக்கின்றன. எல்லோரும் படிக்கக்கூடிய பொதுப் பள்ளிகள், கல்லூரிகளை மாநில அரசுதான் நடத்துகிறது. இதில் மாநில அரசின் பங்கை பார்க்கும்போது, பொறுப்பு மட்டும்தான் இருக்கிறது. அதனோடு சேர்த்து, அதிகாரத்தையும் கொடுக்கவேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்குகின்ற போதே மக்களுக்கு உடனடியாக தேவைப்படும், கல்வி, சுகாதாரம் ஆகியவை மாநில அரசின் கீழ் கொண்டு வரப்பட்டது. எனவே கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில், கல்வியை மாநில பட்டியலுக்கு கொடுப்பதுதான் சரியானது. அதனைத் தான் முதல்-அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்'.

தன்னிச்சையாக செயல்படுதல்

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க புதுக்கோட்டை மாவட்ட தலைவர் குமரேசன்:- ''கல்வி என்பது தற்போது பொதுப்பட்டியல் இருந்தாலும் முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. பொதுப்பட்டியல் என்பது மத்திய, மாநில அரசு இணைந்து கலந்தாலோசனை நடத்தி கல்வி முறைகளை உருவாக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு தன்னுடைய கொள்கையை முழுமையாக பயன்படுத்துகிறது. மாநில அரசின் எந்த ஆலோசனையையும் கலந்து ஆலோசிப்பது இல்லை. மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து அமல்படுத்துகிறது. அதனை நடைமுறைப்படுத்தாவிட்டால் நிதி ஆதாரங்களை நிறுத்துதல் என்பது உள்ளிட்ட செயல்களில் மத்திய அரசு ஈடுபடுகிறது. அதனால் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வந்துவிட்டால் அந்த மாநிலத்தின் சுதந்திரத்திலும், உரிமையிலும் மத்திய அரசு தலையிடமுடியாது. இதைத்தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவருவது தமிழகத்திற்கு நல்லது தான். தமிழகத்தில் உள்ள சூழலுக்கேற்ப கல்வி நடைமுறைப்படுத்தப்படும். மாணவ-மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். பிற போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளவும் மாணவ-மாணவிகளை தயார்படுத்த முடியும்''்.

தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுசெயலாளர் சண்முகநாதன்:-'' மத்திய அரசு புதிய கல்வி கொள்கை என்பதை அறிமுகப்படுத்தி சிலவற்றை திணிக்க பார்க்கிறது. இதனால் தான் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என அரசு வலியுறுத்துகிறது. மேலும் மாநில கல்வி கொள்கையை வகுக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் உயர்மட்டக்குழு அமைத்துள்ளது. இந்த குழுவினர் பல்வேறு தரப்பிடம் கருத்துக்களை கேட்டு வருகின்றனர். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் எவை, எவை எல்லாம் பாதகமான அம்சங்கள் என சொல்லப்பட்டுள்ளதோ? அவைகள் மாநில அரசின் கல்வி கொள்கையில் இடம்பெற்றுவிடக்கூடாது. மாநில பட்டியலுக்கு கல்வி வருவதின் மூலம் தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவது வரவேற்கத்தக்கதாகும். மாணவ-மாணவிகளும் சிரமம் இல்லாமல் படிக்க முடியும்''.

எதிர்கால வளர்ச்சி

விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் அறிவுநிதி:- மாணவர்கள் நலன் மற்றும் அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் எந்த ஒரு கல்விக் கொள்கையும் வரவேற்கத்தக்கது. மாநிலக்கொள்கை கொண்டு வந்தால் அந்தந்த மாநிலத்தில் உள்ள சூழலுக்கு ஏற்ற கல்வியை மாணவர்களுக்கு கற்பிக்க பயனுள்ளதாக இருக்கும். தமிழ், ஆங்கிலம் மட்டுமன்றி பிற மொழிகளையும் படிக்கும் வகையில் மாநில அரசு கல்வி கொள்கையை கொண்டுவர வேண்டும். ஏனென்றால் மொழி அறிவை வளர்த்துக் கொண்டால் மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு அது மிகவும் உறுதுணையாக இருக்கும்.

வேலை வாய்ப்புகள்

வடகாடு அரசு பள்ளி மாணவி ஐஸ்வர்யா:- மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை மாணவர்களை பாதிக்கும் வகையில் இருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. இதனால் தமிழக அரசு மாநிலத்திற்கான புதிய கல்வி கொள்கையை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் எளிதாக இருக்கும். தமிழகத்தின் சிறப்புகள், பண்பாடு, நாகரீகம், கலாசாரம் ஆகியவற்றையும் எளிதாக அறிந்து கொள்ள முடியும். தமிழ் மொழி பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இருக்கும். தேர்வுகளில் எளிதாக தேர்ச்சி பெறுவதோடு, அதிக மதிப்பெண் பெற முடியும் என்பதால் வேலை வாய்ப்புகளும் எளிதாக கிடைக்க வாய்ப்புள்ளது.

மாநில பட்டியலில் சேர்ப்பதே சிறந்தது

கறம்பக்குடியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஜோதிமுத்து:- பன்முக தன்மை கொண்ட நமது நாட்டில், மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட நிலையில் கல்வியை மாநில பட்டியலில் சேர்ப்பதுதான் நல்லது. அரசியல் அமைப்பு சட்டம் நிர்ணயம் செய்யப்பட்டபோது கல்வி மாநில பட்டியலில் தான் இருந்தது. ஆனால் பேச்சுரிமை, எழுத்துரிமை பறிக்கப்பட்ட எமர்ஜென்சி காலத்தில்தான் கல்வி பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது. கல்வியில் மாநிலத்தின் உரிமை பறிக்கப்படுவது ஜனநாயகத்திற்கு ஏற்புடையது அல்ல. கல்வி என்பது ஒரு இனத்தின் பண்பாடு, கலாசாரம், வாழ்க்கைமுறை, வரலாறு சார்ந்ததாக இருக்க வேண்டும். நீட், தேசிய கல்வி கொள்கை போன்றவை மாநில கல்வி முறைக்கு எதிராக உள்ளன. கற்பித்தலில் ஆதிக்கம், திணிப்பு, போன்றவை கல்வி கற்கும் மாணவர்களை உளவியல் ரீதியாக பாதிக்கிறது. எனவே கல்வியை மாநில பட்டியலுக்கு மீண்டும் கொண்டுவருவதுதான் சிறந்தது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story