மாரண்டஅள்ளியில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த துப்புரவு பணியாளர் மீது வழக்கு: உடந்தையாக இருந்த முன்னாள் பேரூராட்சி தலைவர் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை


மாரண்டஅள்ளியில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த துப்புரவு பணியாளர் மீது வழக்கு: உடந்தையாக இருந்த முன்னாள் பேரூராட்சி தலைவர் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 25 Jun 2023 7:30 PM GMT (Updated: 27 Jun 2023 7:42 AM GMT)
தர்மபுரி

மாரண்டஅள்ளி :

மாரண்டஅள்ளியில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த துப்புரவு பணியாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உடந்தையாக இருந்த முன்னாள் பேரூராட்சி தலைவர் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலி சான்றிதழ்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சக்திவேல் (வயது 25). இவர் கடந்த 2016-ம் ஆண்டு மாரண்டஅள்ளி பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக பணியில் சேர்ந்தார். இவர் 1997-ம் ஆண்டு பிறந்ததாக சான்றிதழ்கள் கொடுத்து வேலைக்கு சேர்ந்தார்.

இந்தநிலையில் அதிகாரிகள் அவரது சான்றிதழை ஆய்வு செய்தனர். அப்போது அவர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனிடையே டிசம்பர் மாதம் அவர் பணி நிரந்தரம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

3 பேர் மீது வழக்கு

அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சக்திவேல் பணியில் சேர்ந்தது தொடர்பாக அப்போது பதவியில் இருந்த முன்னாள் பேரூராட்சி செயல் அலுவலர் சாந்தி, பேரூராட்சி தலைவர் கலைவாணி, முன்னாள் கவுன்சிலர் கோவிந்தன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

இதுதொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலர் ஆயிஷா மாரண்டஅள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், தூய்மை பணியாளர் சக்திவேல், முன்னாள் பேரூராட்சி தலைவர் கலைவாணி, கவுன்சிலர் கோவிந்தன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் செயல் அலுவலர் சாந்தி கடந்த 2017-ம் ஆண்டு இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story