குடிநீர் திட்ட பணிக்காக கீழக்கரை நகராட்சிக்கு ரூ.211.32 கோடி ஒதுக்கீடு


குடிநீர் திட்ட பணிக்காக கீழக்கரை நகராட்சிக்கு ரூ.211.32 கோடி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 20 Dec 2022 6:45 PM GMT (Updated: 20 Dec 2022 6:46 PM GMT)

குடிநீர் திட்ட பணிக்காக கீழக்கரை நகராட்சிக்கு ரூ.211.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா கூறினார்.

ராமநாதபுரம்

கீழக்கரை,

கீழக்கரையில் 21 வார்டுகளில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணுமாறு பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. முயற்சியால், குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் நிலை உள்ளதாக கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது;- கீழக்கரை நகராட்சிக்கு நாள்தோறும் 53.20 லட்சம் லிட்டர் குடிநீர் தேவை. தற்போது 8 லட்சம் லிட்டர் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க ரூ.2883 கோடியில் புதிய கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் முயற்சியால் கீழக்கரை நகராட்சிக்கு குடிநீர் திட்ட பணிக்காக ரூ.211. 32 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 12,10,5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட உள்ளன. நகரில் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு கூடுதலாக குடிநீர் குழாய்கள் பதிக்கப்படுகிறது. இதற்கான திட்ட மதிப்பீடுகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டன. கடந்த 2013-2014-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் கீழக்கரையில் 27½ கி.மீ. குடிநீர் குழாய் பதித்ததில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையில் ஆய்வு நடந்து வருகிறது என்றார். அப்போது நகராட்சி பொறியாளர் அருள், கவுன்சிலர்கள் ஷேக் உசேன், நசீருதீன், மீரான் அலி, முகமது ஹாஜா சுஐபு, தி.மு.க. மாணவர் அணி அமைப்பாளர் இப்திகார் ஹசன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story