நான் பேசுனா அவ்ளோ பயமா... குஷ்பூ வெளியிட்ட பரபரப்பு வீடியோ


நான் பேசுனா அவ்ளோ பயமா... குஷ்பூ வெளியிட்ட பரபரப்பு வீடியோ
x
தினத்தந்தி 13 March 2024 3:08 PM GMT (Updated: 13 March 2024 6:00 PM GMT)

நான் கூறிய கருத்தை தவறாக எடுத்துக் கொண்டு திசை திருப்பாதீர்கள் என்று நடிகை குஷ்பூ கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக அரசின் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்' குறித்தும், 3,500 கிலோ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் குறித்தும் பா.ஜனதா தேசிய மகளிரணி ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கருத்து தெரிவித்திருந்தார். மேலும் இதற்கெல்லாம் முதல்-அமைச்சர் என்ன பதில் சொல்ல போகிறார் என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.

குஷ்பு பேசிய இந்த கருத்துக்கு தி.மு.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குஷ்புவின் உருவ பொம்மைகளை எரித்து தி.மு.க.வைச் சேர்ந்த மகளிர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் நடிகை குஷ்பு தான் பேசியது குறித்து விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பான அந்த வீடியோவில், நான் கூறிய கருத்தை தவறாக எடுத்துக் கொண்டு திசை திருப்பாதீர்கள். பல காலமாக மக்களை தி.மு.க. ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. நான் உங்களிடம் சில கேள்விகளை கேட்கிறேன். டாஸ்மாக்கை மூடிவிடுவோம் என்று சொன்னீர்கள், மூடிவிட்டீர்களா?

பல கோடி மதிப்பிலான போதைப்பொருள் தி.மு.க. கட்சிக்காரரிடம் இருந்து கைப்பற்றப்பட்டு இருக்கிறது. செந்தில் பாலாஜி ஜெயிலில் உள்ளார். மக்களுக்கு நீங்கள் செய்த நல்ல விசயத்தை சொல்லுங்கள். அந்த தைரியம் தி.மு.க. தலைவருக்கும் இல்லை, தொண்டருக்கும் இல்லை.

பெண்களுக்கு நீங்கள் ரூ.1000 கொடுப்பதை விட டாஸ்மாக்கை மூடினால் பல ஆயிரம் சேமித்து குடும்பத்தை நடத்துவார்கள். இதை தான் நான் கூறினேன். அதை திசை திருப்பி பூச்சாண்டி காட்டாதீர்கள்" என்று ஆவேசமாக பேசியுள்ளார்.


Next Story