புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை; ஈரோடு கிழக்கு தொகுதிக்கு முன்னுரிமை-இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவு


புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை; ஈரோடு கிழக்கு தொகுதிக்கு முன்னுரிமை-இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவு
x

புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களிடம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:-

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் முடிவடைந்ததும் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த 5-ந் தேதி வெளியிடப்பட்டது. அதில் 10.17 லட்சம் பேர் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் புதிதாகச் சேர்த்துள்ளனர்.

திருத்தங்களை மேற்கொள்வதற்காக 2.15 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆக மொத்தம் 12.32 லட்சம் பேருக்கு புதிதாக வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை 2 மாதங்களுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டைகளை வழக்கும் நிலையில், இடைத்தேர்தல் நடக்க இருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள புதிய வாக்காளர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்று இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

சில மாநிலங்களில் வேறு வடிவில் வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டு வருகின்றன. ஆனால் இனி நாடு முழுவதும் ஒரே சீரான வாக்காளர் அடையாள அட்டை இருக்கும் வகையில் அட்டைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.வாக்காளர் அடையாள அட்டையில் ஏற்கனவே மூன்று விதமான பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கியூ.ஆர். கோடு, ஹோலோகிராம் போன்ற தொழில்நுட்பங்கள் ஏற்கனவே அதில் இடம்பெற்றுள்ளன. இப்போது, போலி அட்டைகளை உருவாக்க முடியாதபடி கூடுதலாக 3 பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

அதன்படி, இதுவரை அட்டைக்கு வெளியே ஒட்டப்பட்ட ஹோலோகிராம் இனி அட்டைக்குள்ளேயே பொருத்தப்படும். 'கோஸ்ட் இமேஜ்' என்ற புதிய அம்சம் சேர்க்கப்படும். கியூ.ஆர். கோடுடன் மிகச்சிறிய அளவிலான எழுத்து (பூதக்கண்ணாடி மூலமாக மட்டுமே பார்க்க முடியும்) அச்சிடப்படும். இந்த அம்சங்களுடன் நாடு முழுவதும் ஒரே சீரான புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சிடப்படுகின்றன.

இதற்கிடையே, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் நம்பரை இணைப்பதற்காக விவரங்களைக் கோரும் பணியும் நடந்து வருகிறது. இதுவரையில் 63.17 சதவீத வாக்காளர்களிடம் இருந்து ஆதார் விவரங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையுடன் (6.20 கோடி) ஒப்பிட்டுப் பார்க்கும்போது 3.91 கோடியாகும்.அதிகபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 94.89 சதவீத வாக்காளர்களின் ஆதார் விவரங்களும், குறைந்தபட்சமாக சென்னையில் 31.45 சதவீத வாக்காளர்களின் விவரங்களும் பெறப்பட்டுள்ளன.

முகவரி மாற்றம் மற்றும் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்வதற்காகவும் ஏற்கனவே விண்ணப்பங்கள் வந்திருந்தன. அவற்றின்படி திருத்தங்களை மேற்கொண்டபோது இந்தி எழுத்துகளுக்கு பதிலாக சேர்க்கப்படும் தமிழ் எழுத்துக்கள் அதில் பொருந்தாமல் போய்விட்டன. உதாரணமாக, 'ஹ' என்ற எழுத்துக்கு பதிலாக 'க' என்று அச்சிடப்பட்டுவிட்டது.இதனால் ஆட்சேபனைகள் வந்தன. எனவே அவற்றை சரிபார்க்கும் பணியை மேற்கொண்டோம். இனி அந்த அடையாள அட்டைகளும் அச்சிடப்பட்டு விரைவில் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story