புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா


புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா
x

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா நாளை (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா நாளை (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

புனித ஆரோக்கிய மாதா பேராலயம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயம் கீழை நாடுகளின் 'லூர்து' நகர் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் 'பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்தை இந்த பேராலயம் பெற்று விளங்குகிறது. இந்த ஆலயம் எதிரே வங்கக்கடல் அமைந்திருப்பது மேலும் சிறப்பு.

ஆண்டு திருவிழா

மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந்தேதி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா நாளை(திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்தவிழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. நாளை மாலை 5.45 மணிக்கு கொடி கடற்கரை சாலை ஆரியநாட்டு தெரு வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

பின்னர் கொடியை தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து வைத்து கொடியேற்றி வைக்கிறார். இதை தொடர்ந்து பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

பெரிய தேர்பவனி

விழா நாட்களில் தமிழ், மராத்தி, மலையாளம், ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, கொங்கனி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வருகிற 7-ந்தேதி நடக்கிறது. 8-ந்தேதி ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். திருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி மாதா பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.

வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை

மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகமும், பேரூராட்சியும், பேராலய நிர்வாகமும் இணைந்து செய்து வருகிறது. விழா முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. பக்தர்களின் பாதுகாப்புக்காக 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story