தூத்துக்குடியில் வீர வணக்க நாள் அனுசரிப்பு


தூத்துக்குடியில் வீர வணக்க நாள் அனுசரிப்பு
x
தினத்தந்தி 21 Oct 2023 6:45 PM GMT (Updated: 21 Oct 2023 6:46 PM GMT)

தூத்துக்குடியில் வீர வணக்க நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அங்குள்ள நினைவு தூணுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி

வீர வணக்க நாள்

1959-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந் தேதி லடாக் பகுதியில் ரோந்து சென்ற மத்திய ரிசர்வ் போலீசார் 10 பேரை சீன ராணுவம் சுட்டுக்கொன்றது. இந்த வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21-ந் தேதி வீரவணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது.

அதன்படி நேற்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் வீர வணக்க நாள் கடைபிடிக்கப்பட்டது.

தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள நினைவுத்தூணில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து நினைவுத் தூணில் போலீஸ் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை

அதன் பின்னர் வீர மரணம் அடைந்த போலீசாரின் தியாகத்தை போற்றும் வகையில் 3 முறை துப்பாக்கியால் வானை நோக்கி மொத்தம் 54 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பணியின் போது உயிர் நீத்த போலீசார், விட்டுச்சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்றும், அவர்களின் தியாகம் வீண்போகாது என்றும் போலீசார் அனைவரும் வீரவணக்க நாள் உறுதிமொழி ஏடுத்தனர்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், துணை சூப்பிரண்டுகள் சுரேஷ் (ஊரகம்), லோகேசுவரன் (மணியாச்சி), வெங்கடேஷ் (கோவில்பட்டி), ஜெயச்சந்திரன் (விளாத்திகுளம்), அருள் (சாத்தான்குளம்) இன்ஸ்பெக்டர்கள் சுனைமுருகன் (ஆயுதப்படை), ராஜாராம் (தென்பாகம்), அய்யப்பன் (மத்திய பாகம்), மாரியம்மாள் (தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ்), மயிலேறும் பெருமாள் (போக்குவரத்து) மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story