காதலனுக்கு இன்னொரு பெண்ணுடன் பழக்கம்?.... தீக்குளித்த கல்லூரி மாணவி - மயிலாடுதுறையில் பரபரப்பு


காதலனுக்கு இன்னொரு பெண்ணுடன் பழக்கம்?.... தீக்குளித்த கல்லூரி மாணவி - மயிலாடுதுறையில் பரபரப்பு
x
தினத்தந்தி 10 May 2024 6:22 AM GMT (Updated: 10 May 2024 7:44 AM GMT)

கல்லூரி மாணவி மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் ஆகாஷ்(வயது 24). இவர், பூம்புகாரில் உள்ள கல்லூரியில் பி.காம். மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடலூர் மாவட்டம் புவனகிரி கச்சப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகப்பன். இவரது மகள் சிந்துஜா(20). இவர், மயிலாடுதுறை அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் ஆகாஷ் வேறு ஒரு பெண்ணிடம் பழகி வந்ததாக மாணவி சிந்துஜா கருதினார். இது தொடர்பாக கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

நேற்று காதலர்கள் இருவரும் பூம்புகார் கடற்கரைக்கு சென்றுவிட்டு மீண்டும் மயிலாடுதுறைக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் கருத்து மோதல் ஏற்பட்டது. மயிலாடுதுறை பாலக்கரை என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளை திடீரென நிறுத்த சொன்ன சிந்துஜா, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

தனது கண் முன்பு காதலி தீக்குளித்ததால் அதிர்ச்சி அடைந்த ஆகாஷ் அலறித்துடித்தபடி அவரை காப்பாற்ற முயன்றார். அப்போது ஆகாஷ் மீதும் தீப்பற்றியது. இதில் இருவரும் பலத்த தீக்காயம் அடைந்து கீழே விழுந்தனர். இதனை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காதலனுடன் சென்ற கல்லூரி மாணவி திடீரென தீக்குளித்ததும், அவரை காப்பாற்ற முயன்றபோது காதலனும் தீக்காயம் அடைந்த சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story