அய்யலூர் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை


அய்யலூர் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, அய்யலூர் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

திண்டுக்கல்

களை கட்டிய சந்தை

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் வியாழக்கிழமை தோறும் ஆடு மற்றும் கோழிச்சந்தை நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று சந்தை கூடியது. திண்டுக்கல் மாவட்டத்திலேயே பிரசித்தி பெற்றதாக, அய்யலூர் சந்தை திகழ்கிறது.

இங்கு திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் வந்து ஆடு, கோழிகளை மொத்தமாக வாங்கி செல்வர்.

இந்தநிலையில் வருகிற 10-ந் தேதி, பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில், இஸ்லாமியர்கள் குர்பானி கொடுப்பதற்காக அதிக அளவில் ஆடுகளை வாங்குவது வழக்கம்.

இதன் எதிரொலியாக, நேற்று நடந்த அய்யலூர் சந்தை களை கட்டியது. அதிகாலை முதற்கொண்டே ஏராளமான வியாபாரிகள், விவசாயிகள் சந்தையில் குவிந்தனர். இதனால் சந்தையில் கூட்டம் அலை மோதியது.

ரூ.2 கோடிக்கு விற்பனை

போட்டி போட்டு ஆடுகளையும், சேவல்களையும் வியாபாரிகள் வாங்கி தங்களது வாகனங்களில் ஏற்றி சென்றனர். வெள்ளாடுகளை காட்டிலும், செம்மறி ஆடுகள் அதிக அளவில் விற்பனை ஆனது. நேற்று ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூ.300 முதல் ரூ.350 வரையிலும், சண்டைக்கு பயன்படும் கட்டு சேவல்கள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும் விற்பனை ஆனது.

இதேபோல் நல்ல திடகாத்திரமான ஆட்டு கிடாய்கள் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் ரூபாய் விற்பனை செய்யப்பட்டது. 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டன.

இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, அய்யலூர் ஆட்டுச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை மும்முரமாக நடந்தது. சுமார் ரூ.2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை நடந்துள்ளது என்றனர். சந்தையில் களை கட்டிய விற்பனையால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஒட்டன்சத்திரம் ஆட்டுச்சந்தை

இதேபோல் நேற்று நடந்த ஒட்டன்சத்திரம் ஆட்டு சந்தைக்கு அதிகாலை 4 மணி முதலே வியாபாரிகளும் விவசாயிகளும் வரத்தொடங்கினர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆட்டுக்கிடாய் விற்பனை களை கட்டியது. வழக்கத்துக்கு மாறாக ஆடுகளின் விலை ஏறுமுகமாகவே இருந்தது. நேற்று ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.


Next Story