கேரை மீன் சீசன் தொடங்கியது

குளச்சலில் கேரை மீன்கள் சீசன் தொடங்கியது. அதே சமயத்தில் குறைவான மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் கவலையில் உள்ளனர்.
குளச்சல்:
குளச்சலில் கேரை மீன்கள் சீசன் தொடங்கியது. அதே சமயத்தில் குறைவான மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் கவலையில் உள்ளனர்.
கேரை மீன்கள் சீசன்
குளச்சல் கடல் பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 1,000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்கள், கட்டுமரங்களில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விசைப்படகுகளில் செல்லும் மீனவர்கள் ஆழ்கடலில் 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம். ஆழ்கடல் பகுதியில் தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய், கிளி மீன்கள், ராட்சத திரட்சி எனப்படும் திருக்கை போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும்.
தற்போது விசைப்படகுகளில் கணவாய், புல்லன், கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் சீசனாகும். இந்தநிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியது. இதனால் மீன்பிடித்து கரை திரும்பிய விசைப்படகுகள் மீண்டும் கடலுக்கு செல்லவில்லை. ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகளும் பாதியிலேயே கரை திரும்பின.
குறைவான மீன்கள் சிக்கின
பின்னர் காற்று தணிந்த பிறகு மீண்டும் கடலுக்கு சென்று மீனவர்கள் மீன்பிடித்தனர். நேற்று காலையில் 11 விசைப்படகுகள் கரை திரும்பின.
ஆனால் சூரை, புல்லன் மற்றும் கேரை ஆகிய மீன்கள் குறைவாகவே கிடைத்தன. மீனவர்கள் இந்த மீன்களை துறைமுக ஏலக்கூடத்தில் கரையேற்றி விற்பனை செய்தனர். ஒரு கிலோ புல்லன் தலா கிலோ ரூ.40-க்கு விலை போனது. சூரை மீன்கள் ரூ.100 முதல் ரூ.120 வரையும் விலை போனது.
கேரை மீன்கள் தலா ஒரு மீன் 40 கிலோ முதல் 90 கிலோ வரை எடையிருந்தது. இந்த மீன் கிலோ தலா ரூ.250 வரை விலை போனது. கேரை மீன் சீசன் தொடங்கியும், அவை குறைவாக கிடைத்ததால் மீனவர்கள் கவலை அடைந்தனர்.