சாலையில் இடையூறாக இருந்த 15 அடி உயர விநாயகர் சன்னதி 18 அடி தூரம் நகர்த்தி வைப்பு


சாலையில் இடையூறாக இருந்த 15 அடி உயர விநாயகர் சன்னதி 18 அடி தூரம் நகர்த்தி வைப்பு
x

வடக்கு மாமல்லபுரத்தில் உள்ள கங்கை அம்மன் கோவில் எதிரில் சாலையில் இடையூறாக இருந்த 15 அடி உயர விநாயகர் சன்னதி கீழ் பாகம் அறுக்கப்பட்டு, ஜாக்கி மூலம் 18 அடி தூரத்தில் நகர்த்தி வைக்கப்பட்டது.

செங்கல்பட்டு

விநாயகர் சன்னதி

செங்கல்பட்டு மாவட்டம் வடக்கு மாமல்லபுரம் பகுதியில் உள்ள கங்கையம்மன் கோவிலின் எதிரில் 15 அடி உயமுள்ள விநாயகர் சன்னதி உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இந்த விநாயகர் சன்னதி சுதை சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டது. அப்போது கோவிலின் எதிரில் இந்த விநாயகர் சன்னதி தவறுதலாக அமைக்கப்பட்டதால், அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாகனங்கள் நிறுத்தவும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் இந்த விநாயகர் சன்னதி இருந்தது.

அதனை நவீன முறையில் அடிப்பாகத்தை அறுத்து, மாற்று இடத்தில் வைக்க கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.

நகர்த்தி வைப்பு

வீடுகளை இடிக்காமல் ஐடிராலிக் முறையில் நகர்த்தும் என்ஜினீயர்களை கொண்டு, ஜாக்கி வைத்து விநாயகர் சன்னதியை நேற்று ஆகம முறைப்படி கோவிலின் இடது பக்கத்தில் 18 அடி தூரத்தில் வெற்றிகரமாக நகர்த்தி வைத்தனர்.

முன்னதாக விநாயகர் சன்னதி நகர்த்தும்போது எந்தவித உடைபாடும் ஏற்படாமல் வெற்றிகரமாக நகர்த்தல் நிகழ்வு நடைபெற வேண்டும் என்று வேண்டி கங்கை அம்மன் கோவிலில் சைவ ஆகம முறைப்படி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு பிறகு விநாயகர் சன்னதி மாற்று இடத்தில் அப்படியே நகர்த்தும் நிகழ்வை பார்க்க அந்த பகுதி பக்தர்கள் திரண்டதால் அம்மன் கோவில் வளாகம் பரபரப்பாக காட்சி அளித்தது.


Next Story