சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடக்குமா? - ஐகோர்ட்டில் இன்று விசாரணை


சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடக்குமா? - ஐகோர்ட்டில் இன்று விசாரணை
x

கோப்புப்படம்

பார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கு எதிரான வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.

சென்னை,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டது. வரும் 31 மற்றும் செப்டம்பர் 1-ம் தேதிகளில் சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிலோமீட்டர் தூரத்துக்கு பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. பந்தயத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மின்விளக்குகள் பொருத்துவது, போட்டியை 8,000 பேர் கண்டு ரசிக்க இருக்கைகள், பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில், பார்முலா-4 கார் பந்தயத்தை சென்னையில் நடத்துவதை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பி.என்.எஸ்.பிரசாத் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இதுதொடர்பான அந்த மனுவில், "சென்னையில் பார்முலா-4 கார் பந்தயம், வரும் 31, 1 ம் தேதிகளில் நடக்க உள்ளது. பொது சாலையில் நடக்கும் இந்த பந்தயத்துக்கு, மாநில அரசு அனுமதி வழங்கியிருக்கக் கூடாது. பொது சாலையில் பந்தயம் நடக்க பந்தய கார்களுக்கு அனுமதி வழங்கினால், மோட்டார் வாகன சட்டத்தின் விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். பந்தய கார்களில் சாலை பாதுகாப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

பந்தயம் நடத்துவதற்காக, தற்காலிகமாக சாலையை மூடுவதற்கு அனுமதி வழங்க, மாநகராட்சிக்கு அதிகாரம் இல்லை. பந்தயம் நடத்த மாநகராட்சி அனுமதி வழங்குவது, சென்னை நகர முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டத்துக்கு முரணானது. பொது மக்களின் நலன்களை காக்க வேண்டிய பொறுப்பு, அரசுக்கு உள்ளது. ஆனால், பந்தயம் நடத்தும் நிறுவனத்துடன் அரசும் கை கோர்த்து உள்ளது.

பந்தயம் நடக்கும் போது, அண்ணாசாலை, சிவானந்தசாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில், போக்குவரத்து பாதிக்கப்படும். இந்தப் பந்தயத்தை மாநில அரசு நடத்துகிறதா அல்லது தனியார் நிறுவனம் நடத்துகிறதா என்பதை, விளையாட்டுத்துறை அமைச்சர் வெளிப்படையாக கூறவில்லை. ஆனால், பந்தயம் சுமுகமாக நடப்பதை உறுதி செய்யும்படி, தலைமைச் செயலர் மற்றும் இதர துறை செயலர்களை, அவர் கேட்டு கொண்டுள்ளார். கார் பந்தயம் நடத்துவது அரசின் வேலை அல்ல. இதை கண்காணிப்பதற்கு, அரசுத்துறை செயலர்களுக்கு அதிகாரம் இல்லை.

பந்தயப் பாதையானது, ஓட்டுவதற்கு தகுதியற்றதாக உள்ளது. இதில் பந்தயம் நடத்த எப்படி அனுமதி அளித்தனர் என்பது வியப்பாக உள்ளது. பந்தயத்தை நடத்த, அரசு அவசரகதியில் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, கார் பந்தயத்துக்கு தடை விதிக்க வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று பிற்பகலில் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், நாளை (இன்று) விசாரிப்பதாக நீதிபதிகள் கூறினர்.

இதன்படி பார்முலா4 கார் பந்தயத்தை நடத்துவதற்கு எதிரான வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.


Next Story