பட்டாசு உற்பத்தி மீண்டும் தொடக்கம்


பட்டாசு உற்பத்தி மீண்டும் தொடக்கம்
x

ஒரு வார விடுமுறைக்கு பின்னர் சிவகாசியில் மீண்டும் பட்டாசு உற்பத்தி தொடங்கப்பட்டதால் தொழிலாளாகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விருதுநகர்

சிவகாசி,

ஒரு வார விடுமுறைக்கு பின்னர் சிவகாசியில் மீண்டும் பட்டாசு உற்பத்தி தொடங்கப்பட்டதால் தொழிலாளாகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பட்டாசு ஆலைகள்

சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த பட்டாசு ஆலைகளில் தீபாவளிக்கான பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த காலங்களை போல் இல்லாமல் இந்த ஆண்டு தீபாவளிக்கு அதிகபட்சமாக 60 சதவீத பட்டாசுகளை மட்டுமே உற்பத்தி செய்ய முடிந்தது.

இதனால் பட்டாசுக்கு பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் பட்டாசு ஆலைகள் தங்களது உற்பத்தியை நிறுத்திக்கொண்டது. வழக்கமாக தீபாவளி பண்டிகை முடிந்து 1 மாதங்களுக்கு பின்னரே பட்டாசு உற்பத்தி தொடங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முடிந்த ஒரே வாரத்தில் மீண்டும் பட்டாசு உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் மகிழ்ச்சி

இதனால் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வழக்கமாக பட்டாசு ஆலை பணிகள் முடிந்த நிலையில் காலண்டர் உற்பத்தி பணிக்கு தொழிலாளர்கள் செல்வது உண்டு. அதன் பின்னர் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை நோட்டு புத்தகம் தயாரிக்கும் பணிகளுக்கு செல்வார்கள். இப்படி சிவகாசி பகுதி தொழிலாளர்கள் ஆண்டு முழுவதும் வருமானம் கிடைத்து வந்தது.

இந்தநிலையில் தற்போது தீபாவளிக்கு ஏற்பட்ட பட்டாசு தட்டுப்பாடு காரணமாக அடுத்த ஆண்டுக்கு தேவையான பட்டாசுகளை தயாரிக்க 30 சதவீதம் ஆலைகள் முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கி விட்டனர். இதனால் சிவகாசி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட ஆலைகளில் பட்டாசு உற்பத்தி தொடங்கப்பட்டு நடந்து வருவதாக கூறப்படுகிறது. எனவே அடுத்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசு தட்டுப்பாடு இருக்காது. மேலும் விலையும் அதிக அளவில் அதிகரிக்க வாய்ப்பு இல்லை. மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் சரக்கு கட்டண உயர்வை கருத்தில் கொண்டு பட்டாசுகளின் விலை நிர்ணயம் செய்யப்படும்.


Next Story