தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி


தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 20 April 2023 6:45 PM GMT (Updated: 20 April 2023 6:46 PM GMT)

ஊட்டியில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

தீத்தொண்டு வாரம்

மும்பையில் உள்ள துறைமுகத்தில் கடந்த 1994-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ந் தேதி நிறுத்தப்பட்டு இருந்த கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும்போது, கப்பல் வெடித்து 66 தீயணைப்பு வீரர்கள் உள்பட 1,300 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை தீத்தொண்டு வாரம் அனுசரிக்கப்படுகிறது. இந்த வாரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்துவது வழக்கம்.

இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்ட தீயணைப்பு அதிகாரி அண்ணாதுரை உத்தரவின்பேரில் நிலைய அலுவலர் பிரேமானந்தன் அறிவுறுத்தலின்பேரில் ஊட்டியில் தீயணைப்பு துறை சார்பில் தீத்தொண்டு வார விழிப்புணர்வு பிரசாரம், ஒத்திகை பயிற்சி, துண்டு பிரசுரங்கள் வினியோகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

வாரம் ஒருமுறை பயிற்சி

இதுகுறித்து தீயணைப்புத்துறையினர் கூறியதாவது:-

அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டால், அந்த இடத்தில் இருந்து நாம் முதலில் எவ்வாறு தப்பிக்க வேண்டும், நம்மை சுற்றி இருப்பவர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சமையல் முடிந்தவுடன் கியாஸ் அடுப்பின் ரெகுலேட்டரை அணைத்து விட வேண்டும். ஆடைகளில் தீப்பிடித்தால் கீழே படுத்து தரையில் உருள வேண்டும். குளிர்ந்த நீரை தீக்காயங்கள் மீது ஊற்ற வேண்டும்.

பள்ளி செயல்படும்போது நுழைவு வாயில் மற்றும் அவசர வழிகளை திறந்து வைக்க வேண்டும். மாணவ-மாணவிகளுக்கு தீ விபத்தின்போது தப்பிக்கும் பயிற்சியை மாதம் ஒருமுறை நடத்த வேண்டும். தரமான மின் உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். வாகனங்களில் தீ ஏற்படும்போது, புகை தென்பட்டவுடன் பேட்டரி ஒயர்களை கழற்றி விட வேண்டும். வெளியூர் செல்லும் நேரங்களில் வீட்டில் மெயின் சுவிட்சை ஆப் செய்து விட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அப்போது அவருடன் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் ஸ்ரீதர் அன்பகன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story