வேளாங்கண்ணி உத்திரியமாதா ஆலய ஆண்டு திருவிழா


வேளாங்கண்ணி உத்திரியமாதா ஆலய ஆண்டு திருவிழா
x
தினத்தந்தி 6 July 2023 7:30 PM GMT (Updated: 6 July 2023 7:30 PM GMT)

வேளாங்கண்ணி உத்திரியமாதா ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி உத்திரியமாதா ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வேளாங்கண்ணி

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கும் வேளாங்கண்ணி கீழை நாடுகளின் 'லூர்து நகர்' என்று அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் கட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் 'பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குகிறது. இந்த ஆலயமானது வங்கக் கடற்கரையோரம் அமைந்திருப்பது சிறப்பம்சமாகும்.

உத்திரியமாதா ஆலயம்

இந்த ஆலயத்தில் உத்திரிய மாதா ஆலயம் தனியாக அமைந்துள்ளது. இங்கு ஆண்டு திருவிழா மும்பை வசாய் பகுதி மீனவர்கள் சார்பாக நடத்தபடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக கொடி பவனி நடந்தது. வேளாங்கண்ணி பேராலயத்தில் இருந்து புறப்பட்ட பவனி கடற்கரை சாலை, ஆரியநாட்டுசாலை வழியாக ஆலயத்தை அடைந்தது. பின்னர் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் கொடி புனிதம் செய்யப்பட்டு கொடிக்கம்பத்தில் ஏற்றிவைக்கபட்டது.

10 நாட்கள்

இதில் பங்குதந்தை அற்புதராஜ், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட்தனராஜ், ஆண்டோஜேசுராஜ், அருள் சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் திரளானோர் கலந்துகொண்டு மாதாவை தரிசனம் செய்தனர். இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.


Next Story