செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளதால் சாலைகளில் சுற்றி திரிந்த பன்றிகள் அகற்றம் - பேரூராட்சி நடவடிக்கை


செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளதால் சாலைகளில் சுற்றி திரிந்த பன்றிகள் அகற்றம் - பேரூராட்சி நடவடிக்கை
x

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளதால் மாமல்லபுரத்தில் சாலைகளில் சுற்றி திரிந்த பன்றிகளை பிடித்து பட்டியில் அடைத்து பேரூராட்சி நடவடிக்கை மேற்கொண்டது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் உலகம் முழுவதிலும் இருந்து 186 நாடுகளை சேர்ந்த 2,500 செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இப்போட்டிக்காக அனைத்து முன்னேற்பாடுகளையும் அரசு செய்து வருகிறது.

மாமல்லபுரத்தில் பன்றிகள் அதிகளவில் ரோட்டில் சுற்றி திரிகின்றன. சுற்றுலா பகுதிகளில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டாலும் ஒரு சில இடங்களில் உள்ள குறுக்கு வழியாக பன்றிகள் உள்ளே புகுந்து சுற்றுலா பயணிகளை அச்சுறுத்துகின்றன. குறிப்பாக கோனேரி மண்டபம், மகிஷாசூரமர்த்தினி மண்டபம், அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் பன்றிகள் அதிகமாக உலா வருகின்றன.

சர்வதேச செஸ் வீரர்களும், ரசிகர்களும் மாமல்லபுரம் வர இருப்பதால் பன்றிகளால் இடையூறு ஏற்படும் என்பதால் மாமல்லபுரத்தில் பன்றிகள் வளர்ப்பவர்களின் வீடுகளுக்கு மாமல்லபுரம் பேரூராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.

மேலும் சாலையில் சுற்றி திரிந்த பன்றிகளை பிடித்து வாகனத்தில் ஏற்றி பட்டியில் கொண்டு போய் அடைத்தனர். பன்றிகளை சாலையில் திரிய விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story