தற்கொலை செய்து கொண்டவரின் உடலை எடுத்து சென்ற ஆம்புலன்ஸ் மோதி முதியவர் பலி


தற்கொலை செய்து கொண்டவரின் உடலை எடுத்து சென்ற ஆம்புலன்ஸ் மோதி முதியவர் பலி
x

தற்கொலை செய்து கொண்டவரின் உடலை எடுத்து சென்ற ஆம்புலன்ஸ் மோதி முதியவர் பலியானார்.

கடலூர்

பண்ருட்டி,

பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பம் அருகே உள்ள சின்ன ஒடப்பன் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 45). இவர் கடன் பிரச்சினையின் காரணமாக நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் அறிந்த முத்தாண்டிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்சை சதீஷ் என்பவர் ஓட்டினார்.

பண்ருட்டி அடுத்த கொஞ்சிக்குப்பம் அருகே வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக சைக்கிளில் சென்று கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த ஏழுமலை (75) என்பவர் மீது சதீஷ் ஓட்டி வந்த ஆம்புலன்ஸ் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ஏழுமலையை சதீஷ், அதே ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story