வீட்டு அருகில் மது குடித்ததை தட்டிக்கேட்டதால் 4 பேர் கொலை: டாக்டர் ராமதாஸ் கண்டனம்


வீட்டு அருகில் மது குடித்ததை தட்டிக்கேட்டதால் 4 பேர் கொலை: டாக்டர் ராமதாஸ் கண்டனம்
x

வீட்டு அருகில் மது குடித்ததை தட்டிக்கேட்டதால் 4 பேர் கொலை: டாக்டர் ராமதாஸ் கண்டனம்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம் கள்ளக்கிணறு என்ற கிராமத்தில், செந்தில்குமார் என்பவரின் வீட்டுக்கு அருகில் அவருக்கு சொந்தமான நிலத்தில் மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த கும்பல் செந்தில்குமாரையும், அவரது குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 3 பேரையும் சரமாரியாக வெட்டி படுகொலை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்த 4 பேருக்கும் எனது மரியாதையை செலுத்துவதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த தாக்குதலில் காயமடைந்த மேலும் ஒருவர் விரைவில் உடல் நலம் தேறவேண்டும். மது மிகவும் கொடூரமானது; சமூகச்சீரழிவுகளுக்கும், சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுக்கும் மதுதான் காரணம் என்பதற்கு இதைவிட கொடிய எடுத்துக்காட்டு எதுவும் தேவையில்லை.

தங்களின் வீட்டுக்கு அருகில் மது குடிக்கக்கூடாது என்று கூறியதற்காக 4 அப்பாவிகளை துடிக்கத்துடிக்க வெட்டி படுகொலை செய்யும் துணிச்சல் குடிகார கும்பலுக்கு வந்திருக்கிறது என்றால், மது மனிதனை மிருகமாக்குகிறது என்று தானே பொருள்? எல்லா குற்றங்களுக்கும் தாய் மது தான் என்பதை நன்றாக அறிந்த பிறகும் இன்னும் எவ்வளவு காலத்துக்கு மது அரக்கனின் அட்டகாசத்தை அனுமதிக்கப்போகிறோம்? மது சமூகத்தை சீரழிக்கிறது என்ற குற்றச்சாட்டை ஒருபுறம் ஒப்புக்கொள்ளும் தமிழக அரசு, இன்னொருபுறம் அதன் மூலம் கிடைக்கும் ரூ.50 ஆயிரம் கோடி வருமானத்துக்காக தொடர்ந்து மது வணிகத்தை நடத்துவது நியாயமல்ல. மது விலக்கே மக்களை காக்கும் என்பதை உணர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story