சுற்றுலா பயணிகளை கவர்ந்த நாய்கள் கண்காட்சி


சுற்றுலா பயணிகளை கவர்ந்த நாய்கள் கண்காட்சி
x
தினத்தந்தி 1 Oct 2023 10:30 PM GMT (Updated: 1 Oct 2023 10:30 PM GMT)

சுருளி அருவி சாரல் விழாவை முன்னிட்டு நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

தேனி

கம்பம் அருகே சுருளி அருவி பகுதியில் தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் சாரல் விழா கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 5-ம் நாளான நேற்று காலை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுக்குமாரி முன்னிலையில் 'நடப்போம் நலம் பெறுவோம்' என்ற தலைப்பில் நடைபயிற்சி நடைபெற்றது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடந்த இந்த நடைபயிற்சி, சுருளிப்பட்டியில் இருந்து சுருளி அருவி வரை நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அதன்பிறகு சுருளி அருவி பகுதியில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் பொய்க்கால் குதிரை, நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக நாய்கள் கண்காட்சி நடந்தது. இதில், ஏராளமானோர் தங்களது வீடுகளில் வளர்க்கும் செல்லபிராணியான நாய்களை கண்காட்சிக்கு அழைத்து வந்திருந்தனர். இதில், புள்ளி குட்டா, சுகிள் சிட்சு, லேபர் டார், ஜெர்மன் செப்பேர்டு, ராட் வீரன், வேர்ல்டு சுமாலஸ் பீடு, சிகாகோ, கிரேடன், டாப்ஸ் கவுண்ட் உள்ளிட்ட வகை நாய்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அத்துடன் போலீஸ் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.


Next Story