தி.மு.க. இளைஞரணியினருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல்


தி.மு.க. இளைஞரணியினருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல்
x

திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணியினருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.

திருச்சி

திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணியினருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.

உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க. இளைஞரணியில் மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு நேர்காணல் நடத்தி பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக விண்ணப்பித்தவர்களில் திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, திருச்சி மத்திய மாவட்டம் மற்றும் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளுக்கான நேர்காணல் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று மாலை நடந்தது.

இந்த நேர்காணல் நடத்துவதற்காக தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமாகிய உதயநிதி ஸ்டாலின் நேற்று பகல் சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி வந்தார்.

திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு தி.மு.க.சார்பில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நேர்காணல் நடத்தினார்

இதனை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சியில் ஒரு ஓட்டலில் தங்கி சிறிதுநேரம் ஓய்வு எடுத்தார். அதன்பிறகு மாலை 4 மணி அளவில் கலைஞர் அறிவாலயத்துக்கு சென்ற அவர், தி.மு.க. இளைஞரணி அரியலூர், பெரம்பலூர், திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, திருச்சி மத்திய, மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கான நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான நேர்காணலில் கலந்து கொண்டார்.

நேர்காணலுக்கு வந்து இருந்த இளைஞர்கள் மாவட்ட வாரியாக அடையாள அட்டை அணிந்தபடி வரிசையாக அமரவைக்கப்பட்டு இருந்தனர். பின்னர், ஒவ்வொருவராக உதயநிதி ஸ்டாலின் இருந்த தனி அறைக்குள் அனுப்பப்பட்டனர். அங்கு அவர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். நேர்காணலுக்கு வந்து இருந்தவர்கள் வயது சான்றிதழ், கழக உறுப்பினர் அட்டை உள்ளிட்டவைகளை கொண்டு வந்து இருந்தனர்.

பயிற்சி பாசறை கூட்டங்கள்

கட்சி சார்பில் இதுவரை என்னென்ன நிகழ்ச்சிகள் நடத்தி உள்ளீர்கள்?. அதற்கான புகைப்படத் தொகுப்பு வைத்துள்ளீர்களா?. தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட பயிற்சி பாசறை கூட்டங்களில் பங்கேற்றுள்ளீர்களா?. அப்படியானால் அங்கு என்ன தலைப்புகளில் பேச்சாளர்கள் பேசினார்கள். உங்களின் வயது என்ன? உள்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக நேர்காணலில் பங்கேற்று திரும்பிய இளைஞர்கள் கூறினார்கள்.


Next Story